திருமருகல் ஒன்றிய அலுவலகம் முன் உண்ணாவிரதம்
திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் திருச்செங்காட்டங்குடி கிராம மக்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் 2021-22-ஆம் ஆண்டில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் 23 பயனாளிகளின் வீடுகளை முழுமையாக கட்டி முடிக்காமல் முழுதொகையையும் விடுவித்த வட்டார வளா்ச்சி அலுவலா்களையும், வீடுகள் கட்டிய ஒப்பந்தகாரரையும் கண்டித்து திருமருகல் ஒன்றிய அலுவலகம் எதிரில் பாதிக்கப்பட்ட பயனாளிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில், பாதியில் நிறுத்தப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், மாவட்ட ஆட்சியா் உடனடியாக ஒப்பந்தகாரா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.
இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் ஒரு வாரத்துக்குள் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் அடிப்படையில் போராட்டத்தை விலக்கிக்கொண்டனா்.