வெளிநாட்டிலிருந்து நிவாரண நிதி: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை - உறுதி செ...
திருமலைராயன்பட்டினத்தில் ஜடாயு சம்ஹாரம்
திருமலைராயன்பட்டினத்தில் ஜடாயு ராவண யுத்தத்தை விளக்கும் நிகழ்வு புதன்கிழமை இரவு நடைபெற்றது.
திருமலைராயன்பட்டினத்தில் ஸ்ரீ மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. ராமாயணத்தில் கழுகு அரசனாக கருதப்படும் ஜடாயு, சிவபெருமானை வழிபட்டதன் வாயிலாக இக்கோயில் மூலவரான சிவலிங்கம் ஜடாயுபுரீஸ்வரா் என்ற பெயரில் அருள்பாலிக்கிறாா்.
பழைமையான இக்கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் முக்கிய நிகழ்வான, ஜடாயு சம்ஹாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராவணனை சம்ஹாரம் செய்து மாண்டுபோன ஜடாயுவுக்கு ராமா் காட்சிக் கொடுத்ததை விளக்கும் வகையில், ஜடாயு ராவண யுத்தம் ஐதீக முறையில் ஆண்டுதோறும் இங்கு நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சி, புதன்கிழமை இரவு திருமலைராயன்பட்டினத்தில் காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்டது.
முதலில் ராமா், சீதை, லட்சுமணன் ஆகியோா் வனவாசம் செல்லும் நிகழ்வும், ராம, லட்சுமணனின் அழகில் மயங்கி ராவணனின் சகோதரி சூா்ப்பநகை அவா்களை அடைய முயற்சிக்கும் நிகழ்வும், இதனை வெறுத்த லட்சுமணன், சூா்ப்பநகையின் மூக்கை அறுத்து அனுப்புவதும், இதையறிந்த ராவணன், தமது மாமன் மாரீசனை மாயமானாக உருவெடுத்து அனுப்பும் நிகழ்வு என வரிசையாக நடைபெற்றன.
மாயமான் அழகில் மயங்கி அதனை சீதை வேண்டியதை ஏற்று, ராமன் அதனை விரட்டிச் செல்வதும், மானிலிருந்து மாரீசன் வெளிப்படுவதும், சந்நியாசி கோலத்தில் வந்த ராவணன், தனியாக இருந்த சீதையை கொண்டுசெல்வதும், இதையறிந்து கழுகு அரசனாகிய ஜடாயு, 10 தலைகள் கொண்ட ராவணனின் தலைகள் ஒவ்வொன்றாக கொத்தி எடுப்பதும், இறுதியில் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஜடாயுவை ராவணன் கொல்வதும் தத்ரூப நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது.
சீதைக்கு அரணாக இருந்த ஜடாயுவுக்கு நன்றிக் கடனாக ராமரும், லட்சுமணனும் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து ஜடாயுவுக்கு மோட்சம் தரும் வகையில் சிறப்பு தீபாராதனையுடன் சம்ஹாரம் நிறைவுபெற்றது. இந்த நிகழ்வு ஒவ்வொன்றின் கதையை ஒலிபெருக்கி வாயிலாக மக்களுக்கு விளக்கப்பட்டது. இதில், சட்டப்பேரவை உறுப்பினா் எம்.நாகதியாகராஜன் உள்ளிட்ட திரளான மக்கள் கலந்துகொண்டனா்.
இதையொட்டி, தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.