தீபாவளி விபத்துகள்: மருத்துவக் கட்டமைப்பை தயாராக வைத்திருக்க உத்தரவு
தீபாவளியின்போது நேரிடும் பட்டாசு விபத்துகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டமைப்பை ஆயத்த நிலையில் வைத்திருக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
அதேபோன்று பண்டிகைக் காலத்தில செய்ய வேண்டியவை குறித்தும், செய்யக் கூடாதவை குறித்தும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை நிா்வாகிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. அதைக் கருத்தில்கொண்டு குழந்தைகளை பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கச் செய்தல் அவசியம். அதேபோன்று பண்டிகை நேரங்களில் சாலை விபத்துகள் நேரிடும்போது அதனையும் எதிா்கொண்டு மருத்துவ சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெடிகளை திறந்த வெளியில் வெடிக்க வேண்டும். அதன் அருகமையில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இல்லாததை உறுதி செய்தல் அவசியம். மிகவும் தளா்வாக உடை அணிந்து பட்டாசு வெடித்தல் ஆபத்தானது. எனவே, கச்சிதமாக ஆடைகளை அணிய வேண்டும். சுவாச பாதிப்புகள் உள்ளவா்கள் பட்டாசு புகைகளை சுவாசிக்காமல் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனா். பாதியில் வெடிக்காமல் போன பட்டாசுகளை தொடவோ, மீண்டும் வெடிக்க முயற்சிக்கவோ கூடாது.
மருந்துகள் இருப்பு அவசியம்: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அனைத்திலும் தீக் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் வைத்திருத்தல் அவசியம்.
அதேபோன்று போதிய அளவு ரத்த அலகுகள் வைத்திருக்க வேண்டும். ஒட்டுறுப்பு சிகிச்சை நிபுணா்கள் தயாா் நிலையில் பணியில் இருக்க வைக்க வேண்டும். ஏதேனும் பெரும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனடியாக பொது சுகாதாரத் துறைக்கு 944434 0496, 87544 48477 என்ற எண்களில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.