துணை ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டு; காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்கள் பாஜகவிற்கு ஆதரவா?
துணை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று (செப்.9) நடந்தது.
17வது துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிராவின் ஆளுநரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்றது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், மொத்தமுள்ள 781 வாக்குகளில் வெற்றிபெற தேவையான 391 வாக்குகளை விட 61 வாக்குகள் கூடுதலாகப் பெற்று 452 வாக்குகளுடன் வெற்றி பெற்றிருக்கிறார்.
இதன் மூலம் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்திலிருந்து மூன்றாவது துணைக் குடியரசுத் தலைவராகியிருக்கிறார்.
இந்நிலையில் துணை ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

துணை ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டு
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் ரகசியமான முறையில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த 14 எம்.பி.க்கள் கட்சி மாறி வாக்களித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு கட்சி மாறி வாக்களிப்பதற்காக கோடிகளில் பேரம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 427 எம்.பி.க்கள் உள்ளனர். இதுதவிர ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பா.ஜ.க-விற்கு ஆதரவளித்திருந்தது.
அதன் 11 எம்.பி.க்களைச் சேர்த்தால் பா.ஜ.க வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 438 ஓட்டுகள்தான் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 452 ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளரான ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டிக்கு 300 ஓட்டுகளே கிடைத்திருக்கின்றன.
இதை வைத்துப் பார்க்கும்போது எதிர்க்கட்சி, காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் 14 எம்.பிக்கள் கட்சி மாறி, பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டு போட்டிருக்கின்றனர் என்பது தெரியவருகிறது.
இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. கட்சி மாறி ஓட்டு போட பல கோடி பேரங்கள் நடந்திருக்கலாம் எனவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs