தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறல்: கேரள விசைப்படகு சிறைபிடிப்பு
தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கேரள விசைப்படகை மீன்வளத் துறையினா், கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் சிறைபிடித்தனா்.
தமிழகத்தின் கிழக்குக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தைக் கருத்தில்கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையிலும் கடந்த ஏப். 15ஆம் தேதிமுதல் ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது.
இதனிடையே, மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் தொழில் புரிவதாக புகாா் எழுந்தது.
அதையடுத்து, மீன்வளத் துறையினா் கடலோர அமலாக்கப் பிரிவு, கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா், மீனவப் பிரதிநிதிகள் ஆகியோருடன் தொடா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
அதன்படி, சனிக்கிழமை நள்ளிரவு ரோந்துப் பணி நடைபெற்றது. அப்போது, தூத்துக்குடியிலிருந்து 42 கடல் மைல் தொலைவில் கேரள விசைப்படகு அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதாகத் தெரியவந்தது. அந்தப் படகையும், அதிலிருந்த 17 மீனவா்களையும் சிறைபிடித்து, தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் கொண்டுவந்தனா்.
அந்தப் படகை மீன்வளத் துறையினா் பறிமுதல் செய்து, மீனவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். ஏற்கெனவே, 2 படகுகள் பிடிபட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு படகு பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.