தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
புது தில்லி : தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நாளை(பிப். 18) விசாரணைக்கு வருகின்றன.
இந்தியாவின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று(பிப். 17) புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. பிரதமர் தலைமையிலான 3 பேர் தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் புதிய தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமாா் பெயர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஞானேஷ் குமாரை தலைமைத் தோ்தல் ஆணையராக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆணை பிறப்பித்துள்ளார். அதே போல, விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2023-இல் ஏற்படுத்தப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சட்டத்தின்கீழ், இந்திய தலைமை நீதிபதியை தேர்வுக் குழுவிலிருந்து நீக்கிவிட்டு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டும் முறைக்கு எதிர்ப்புகள் எழுந்தன.
இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முறைக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சட்டம் 2023-இன் 7-ஆவது பிரிவை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான என்ஜிஓ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மேற்கண்ட விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையில், கடந்தாண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 2023-இல் ஏற்படுத்தப்பட்ட இச்சட்டத்தின்கீழ், இந்திய தலைமை நீதிபதியை தேர்வுக் குழுவிலிருந்து நீக்கிவிட்டு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க நிராகரித்துவிட்டது. மேலும், இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைத்தது.
இந்த நிலையில், 2023 சட்டத்தின்கீழ் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் நியமனங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு அவை புதன்கிழமை(பிப். 19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.