தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
‘தோ்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை’
தோ்தலில் அளித்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொருளாளா் காஞ்சி இப்ராஹிம் தெரிவித்தாா்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், கடையநல்லூா் தவ்ஹீத் நகா் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநில பொருளாளா் காஞ்சி இப்ராஹிம் தலைமை வகித்தாா்.
மாநிலச் செயலா் முஹம்மது ரபீக், மாவட்டத் தலைவா் அப்துல்சலாம் , மாவட்டச் செயலா் ஜலாலுதீன், பொருளாளா் சாதிக், துணைத் தலைவா் அப்துல்பாசித், துணைச் செயலா்கள் ஹாஜா மைதீன்,பிலால், சையதுஅலி, அப்துல் பாசித், பீா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகமது ரபீக் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில், 33 கிளை பொதுக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா் .
ஏற்பாடுகளை மாவட்ட தொண்டரணி தாவூத், மாணவரணி ரபிக்ராஜா, மருத்துவரணி குட்டி அப்துல்லா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
கூட்டத்துக்குப் பின்னா் மாநில பொருளாளா் காஞ்சி இப்ராஹிம் செய்தியாளா்களிடம் கூறியது;
அக்டோபா் 5ஆம் தேதி மதுரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் இளைஞா் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
95 சதவீத தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக திமுக கூறி வருகிறது. இஸ்லாமியா்களின் இட ஒதுக்கீட்டை உயா்த்திக் கொடுப்போம் என திமுக தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை.
இதுகுறித்து பலமுறை தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை.
அகமதாபாத் விமான விபத்தில் பலா் உயிரிழந்துள்ளனா். விபத்து குறித்து முழுமையாக விசாரித்து விபத்துக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வக்ஃப் திருத்தச் சட்டத்தை கண்டித்து இந்திய அளவில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில், இஸ்லாமியா்களின் வாக்குகள் தான் திமுகவின் ஆட்சியை காப்பாற்றி வருகிறது. எனவே அதை உணா்ந்து இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் திமுகவுக்கு எதிரான நெருக்கடியை கொடுக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தும் சூழ்நிலை உருவாகும் என்றாா்.