ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்
தொண்டர்கள் கீழே விழுந்தால் யார் பொறுப்பு? விஜய் தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
பொதுக் கூட்டங்களின் போது உயரமான இடங்களில் ஏறும் தொண்டர்கள் கீழே விழுந்தால் யார் பொறுப்பேற்பது என்று தவெக தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். கடந்த சனிக்கிழமை திருச்சியில் தனது முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
திருச்சியில் நடைபெற்ற தவெகவின் கூட்டத்துக்கு மாநகர காவல்துறையினர் 23 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தனர்.
அடுத்தடுத்து, வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை விஜய் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த நிலையில், தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு வழங்கப்படும் விண்ணப்பங்களுக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தலைவராக இருக்கும் நீங்கள்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், தொண்டர்கள் உயரமாக இடங்களில் ஏறி கீழே விழுந்தால் யார் பொறுப்பேற்பது? தொண்டர்களை கட்சித் தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா? எனக் கேள்வி எழுப்பினர்.
இதனிடையே, விஜய் பிரசாரத்துக்கு நிறைவேற்ற இயலாத, பிற கட்சிகளுக்கு இல்லாத வகையில் நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக விஜய் தரப்பில் முன்வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் பொதுவான நிபந்தனைகளை வகுக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும், கூட்டங்களில் பொதுச் சொத்துகள் சேதமடைந்தால், அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக குறிப்பிட்ட தொகையை முன்வைப்புத் தொகை பெறும் வகையில் நிபந்தனைகளை விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், திருச்சியில் சேதமடைந்த பொதுச் சொத்துகளுக்கு இழப்பீடு வசூலிக்கப்படாவிட்டால் நீதிமன்றம் தலையிடும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 24 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.