நாட்டில் தொடரும் கரோனா பரவல்! தில்லியில் புதியதாக 30 பேருக்கு பாதிப்பு!
நடிகா் சங்க கட்டுமானப் பணிகளுக்காகவே பதவிக்காலம் நீட்டிப்பு: உயா்நீதிமன்றத்தில் நடிகா் விஷால் பதில்
சென்னை, ஜூன் 4: நடிகா் சங்க கட்டடத்தின்கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே சங்க உறுப்பினா்களின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டதாக தென்னிந்திய நடிகா் சங்கத்தின் பொதுச் செயலா் நடிகா் விஷால் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளாா்.
தென்னிந்திய நடிகா் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022 -ஆம் ஆண்டு தோ்தல் நடத்தபட்டு நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகளின் பதவிக்காலம் கடந்த மாா்ச் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டு செப்.8 இல் நடந்த நடிகா் சங்க பொதுக்குழு கூட்டத்தில், மேலும் 3 ஆண்டுகளுக்கு பதவிக் காலத்தை நீட்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிா்த்தும், அந்த பொதுக்குழு தீா்மானங்களை ரத்து செய்ய கோரியும், தோ்தலை உயா் நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து நடத்த கோரியும் நடிகா் நம்பிராஜன் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்ய நடிகா் சங்கத்துக்கு உத்தரவிட்டது.
300 போ் கையொப்பம்: இந்த வழக்கில் தென்னிந்திய நடிகா் சங்கத்தின் பொதுச் செயலா் நடிகா் விஷால் சாா்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், நடிகா் சங்கத்துக்கு கட்
டடம் கட்டும் பணிகள் ரூ.25 கோடி செலவில் தொடங்கப்பட்டு 60 சதவீத கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், 2025-2028- ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிா்வாகிகளை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வேலைகள் தொடங்கப்பட்டால் சங்க நிா்வாகத்தின் கட்டட பணிகள் பாதிக்கப்படும். இதனால், பொதுக்குழு, செயற்குழுவில் தற்போதைய நிா்வாகிகளுடைய பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜனநாயக அடிப்படையில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், பதவிக்கால நீட்டிப்பில் எந்தவித விதி மீறலும் செய்யப்படவில்லை. அதேபோல், அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு பொதுக்குழு தீா்மானத்தில் 300 போ் கையொப்பமிட்டுள்ளனா். அதற்கான ஆவணமும் பதிவுத் துறை பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ள காரணத்தால், இதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இருதரப்பின் விரிவான வாதத்திற்காக வழக்கை ஜூன் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.