விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடும் நடவடிக்கை: துணை இயக்குநா் எச்ச...
ரெப்போ விகிதத்தை குறைத்த RBI; ரியல் எஸ்டேட்டுக்கு ஜாக்பாட் - வீட்டுக் கடன் வாங்கியிருப்பவரா நீங்கள்?
வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்களுக்கு இது ஒரு 'பம்பர் ஆண்டு' என்றே சொல்லலாம். இன்றோடு இந்திய ரிசர்வ் வங்கி மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
இன்று நடந்த இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில், 'ரெப்போ வட்டி விகிதத்தில் 50 பேசிஸ் புள்ளிகள் குறைப்பு' என்ற குட் நியூஸை அறிவித்துள்ளார் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா.
எவ்வளவு குறையும்?
1 பேசிஸ் புள்ளிகள் = 0.01 சதவிகிதம். அதனால், 100 பேசிஸ் புள்ளிகள் = 1 சதவிகிதம். இப்போது 50 பேசிஸ் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதால், ரெப்போ வட்டி விகிதம் 0.50 சதவிகிதம் குறைந்துள்ளது.

உதாரணத்திற்கு, 20 ஆண்டுகளுக்கு, 30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனை எடுத்துக்கொள்வோம். இதன் வட்டி 9 சதவிகிதம்.
இப்போது இந்த ரெப்போ வட்டி விகித குறைப்பிற்குப் பிறகு, வீட்டுக் கடனுக்கான வட்டி 8.50 சதவிகிதமாகக் குறைந்துவிடும்.
முன்பு, மாதம் ரூ.26,992 இ.எம்.ஐ ஆகக் கட்டியிருக்க வேண்டும். இப்போது, ரூ.26,035-ஐ இ.எம்.ஐ ஆகக் கட்டினால் போதும். இதனால், மாதம் 957 ரூபாயை சேமிக்கலாம். 20 ஆண்டுகளுக்கு ரூ.2.3 லட்சம் இ.எம்.ஐ கட்டுவது மிச்சம் ஆகும்.
வீட்டுக் கடனை 20 ஆண்டுகள் கழித்து கட்டும்போது, 9 சதவிகித வட்டிக்கு ரூ.34.78 லட்சம் கட்ட வேண்டியதாக இருந்திருக்கும். ஆனால், 8.50 சதவிகித வட்டியில் 32.48 லட்சம் மட்டுமே கட்டியிருப்பீர்கள்.
வீட்டுக் கடன் வாங்கியிருப்பவரா நீங்கள்?
ஏற்கனவே வீட்டுக் கடனை ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் வாங்கியிருப்பவர்களுக்கு இந்த ரெப்போ வட்டி விகிதக் குறைப்பு நிச்சயம் நல்ல ஆஃபர். நீங்கள் கட்டும் வட்டி விகிதத்தில் இருந்து 0.50 சதவிகிதம் குறையும். இதை வைத்து ஒன்று, மாதா மாதம் கட்ட வேண்டிய இ.எம்.ஐ தொகையைக் குறைக்கலாம் அல்லது கடனுக்கான காலத்தைக் குறைக்கலாம். இந்த இரண்டு ஆப்ஷன்களில் உங்களுக்கு எது சரியாக இருக்குமோ, அதை கவனமாகத் தேர்தெடுத்துக் கொள்ளுங்கள்.
ரியல் எஸ்டேட் துறைக்கு ஜாக்பாட் காலம்!
ரெப்போ வட்டி விகிதக் குறைப்பினால், வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டியும் குறையும். அதனால், மக்கள் வீடு வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அதனால், வீடுகள் அதிகம் வாங்கப்படும்.
வீடு வாங்க ஆசை இருந்தும், வீடு வாங்காமல் இருப்பவர்களுக்கு இந்த வட்டிக் குறைப்பு ப்ளஸாக அமையும். இதனால், இவர்களும் வீடு வாங்கும் முடிவிற்கு வரலாம்.
இன்னும் யாருக்கெல்லாம் பலன்?
வீட்டுக் கடன் பற்றி மட்டும் தொடர்ந்து பேசி வருவதால், அது வாங்குபவர்களுக்கு மட்டும் தான் லாபம் என்றில்லை. இனி புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு இந்த ரெப்போ வட்டி விகித குறைப்பு உதவும்.
வாகனக் கடன், தொழில் கடன் என எந்தக் கடனை புதிதாக வாங்கினாலும், வட்டிக் குறைப்பு இருக்கும். இதனால், தாராளமாகப் புதிதாக கடன் வாங்கலாம். 'தாராளம்' என்ற வார்த்தையைப் பார்த்ததும், கண்ணை மூடிக்கொண்டு கடனை வாங்கிவிடக் கூடாது. 'நமக்கு அந்தக் கடன் தேவையா?', 'கடன் வாங்கினால் திருப்பிக் கட்ட முடியுமா?' என்று யோசித்து வாங்குவது நல்லது. வட்டி விகிதக் குறைப்பு என்றதுமே, நாம் கடன் வாங்கிவிட வேண்டும் என்றில்லை. நமது தேவை, நிதி நிலையைப் பொறுத்து கடன் வாங்குவது தான் எப்போதுமே புத்திசாலித்தனம்.
இந்தியாவிற்கு எப்படி லாபம்?
வட்டி விகிதக் குறைப்பு என்பதால் மக்கள் கடன் வாங்கி வீடு, வாகனம், பொருட்கள் ஆகியவற்றை வாங்குவார்கள். இன்னொரு பக்கம், தொழில் தொடங்க ஆசை இருப்பவர்கள் தொழில் கடன் வாங்கி தொழில்களைத் தொடங்குவார்கள். இது இரண்டுமே இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும். கூடவே, மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும் என்பதை மறுக்க முடியாது.
இருந்தாலும்...
'அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு' என்ற பழமொழி நாம் அனைவரும் அறிந்தது தான். அது இந்த இடத்திலும் பொருந்தும். கடன் வாங்கி மக்கள் ஒவ்வொன்றாக வாங்கும் போது, அவைகளின் விலை உயரும்... நாட்டின் பணவீக்கமும் அதிகரிக்கும்.
'அது தான் குறைந்த வட்டி விகிதம் தானே' என்று மக்கள் அதிகம் கடன் வாங்குவார்கள். இதற்கான இ.எம்.ஐ மாதா மாதம் வருமானத்தில் இருந்து செல்லும் போது, சேமிப்புகள் குறையும். அதனால், இதை பயன்படுத்தும் போது, உஷார் மக்களே!