சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பாஜகவின் அரசியல் முடிந்துவிடும்: ராகுல் காந்தி
பிரதமர் மோடி சரணடையும் பழக்கத்தைக் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துக்கு பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
பிகாரில் ராஜிகிர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,
"என்னுடைய குறிக்கோள் சாதிவாரி கணக்கெடுப்புதான். மக்களவையில் பிரதமர் மோடி முன்பாகவே இதனை நான் தெரிவித்தேன்.
பிரதமர் மோடி சரணடையும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், இதுவரை 11 முறை, பிரதமர் மோடி சரண்டர் ஆகிவிட்டதாகக் கூறியுள்ளார். ஆனால் மோடி இதுவரை அதுபற்றி வாய் திறக்கவில்லை. உண்மை என்பதனால்தான் அவர் பேச மறுக்கிறார்.
வெளிப்படையான உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக அரசு நடத்தப்போவதில்லை. ஏனெனில் அவ்வாறு செய்தால் அத்துடன் எல்லாம் முடிந்துவிடும். அவர்களின் அரசியல் முடிவுக்கு வந்துவிடும்.
அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறேன். எதிர்காலத்தில் நாங்கள் ஆட்சிக்குவந்தால் 50% இட ஒதுக்கீட்டை நீக்கிவிடுவோம். பிகாரில் இருந்து இடஒதுக்கீட்டை தொடங்குவோம்" என்று பேசியுள்ளார்.