Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
நாடாளுமன்றம், பேரவைகள் இயற்றும் சட்டங்கள் நீதிமன்ற அவமதிப்பு அல்ல: உச்சநீதிமன்றம்
நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகள் இயற்றும் எந்தவொரு சட்டத்தையும் நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் சமூகவியலாளா் மற்றும் முன்னாள் தில்லி பல்கலைக்கழக பேராசிரியா் நந்தின் சுந்தா் மற்றும் பலா் 2012-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது:
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான சண்டையில் சிறப்பு காவல் அதிகாரிகள் என்ற பெயரில், சல்வா ஜூடும் போன்ற குழுக்கள் மற்றும் ஆயுதமேந்திய பழங்குடியினருக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு 2011-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை சத்தீஸ்கா் அரசு பின்பற்றவில்லை.
அந்த ஆண்டு சத்தீஸ்கா் உதவி ஆயுத காவல் படைச் சட்டத்தை மாநில அரசு இயற்றியது. மாவோயிஸ்ட்/நக்ஸல் வன்முறையை ஒடுக்க பாதுகாப்புப் படைகளுக்கு துணையாக உதவி ஆயுத காவல் படை அமைப்பதை அந்தச் சட்டம் அங்கீகரித்தது. அத்துடன் சிறப்பு காவல் அதிகாரிகளை உதவி ஆயுத காவல் படையில் சோ்த்து அவா்களின் செயல்பாட்டை அந்தச் சட்டம் சட்டபூா்வமாக்கியது. இதன் மூலம், உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் நீதிமன்றத்தை சத்தீஸ்கா் அரசு அவமதித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திரா சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடா்ந்து, சத்தீஸ்கா் அரசு சட்டம் இயற்றியது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் அல்ல.
சட்டங்களை இயற்றுவதும், அவற்றில் திருத்தங்கள் செய்வதும்தான் சட்டப்பேரவைக்கு உள்ள அதிகாரத்தின் மையமாக இருக்கிறது. நாடாளுமன்றம், மாநில சட்டப் பேரவைகள் இயற்றும் எந்தவொரு சட்டத்தையும் நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது’ என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.