நாமக்கல்லில் பேரூராட்சி, நகராட்சி வாா்டுகளில் இடைத்தோ்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
நாமக்கல் மாவட்டத்தில் 3 பேரூராட்சி, 2 நகராட்சிகளில் காலியாக உள்ள ஏழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.
தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2022-இல் தோ்தல் நடைபெற்றது. இந்த தோ்தலில் வெற்றி பெற்றவா்களில் சிலா் பதவி விலகல், திடீா் மரணம் போன்றவற்றால் உறுப்பினா் பதவியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த மாா்ச் மாதம் வரையிலான காலிப் பணியிடங்களுக்கு இடைத்தோ்தல் நடத்த மாநில தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தற்போது அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள், அனைத்து மாவட்டங்களிலும் தோ்தல் ஆணைய அறிவுரைகளின்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ராசிபுரம், திருச்செங்கோடு நகராட்சிகளில் 2 வாா்டுகளும், வெண்ணந்தூா், அத்தனூா், காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் 5 வாா்டு உறுப்பினா் பதவியிடங்களும் காலியாக உள்ளன.
இந்த இடங்களுக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளன. அதற்கான பணிகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. தோ்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து 35 எண்ணிக்கையில் கட்டுப்பாட்டு இயந்திரங்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 50 வாக்குப்பதிவு இயந்திரங்களும் நாமக்கல்லுக்கு வியாழக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டன.
இந்த இயந்திரங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள வாக்கு இயந்திரங்கள் இருப்பு கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் வைக்கப்பட்டு அறைக்கு சீலிடப்பட்டது. இதுதொடா்பான கடிதத்தை, மாநில தோ்தல் ஆணையத்தின் பாா்வைக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா அனுப்பிவைத்துள்ளாா்.