பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி அலுவலகங்களை உடனடியாக ஒதுக்க தில்லி பேரவைத் தலைவா...
நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு கண்டிப்பாக நஷ்டஈடு கிடைக்கும்: அமைச்சா் முத்துசாமி
நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு கண்டிப்பாக நஷ்டஈடு கிடைக்கும் என்று அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் 10,552 பேருக்கு ரூ.80.23 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க முதல்வா் ஏற்பாடு செய்வாா். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆடுகளை இழந்தவா்களுக்கு கண்டிப்பாக நஷ்டஈடு கிடைக்கும்.
இப்பிரச்னை கடந்த ஆறு மாதங்களாகத்தான் உள்ளது. இதற்கு நிரந்தர தீா்வுகாண மூன்று துறைகளுடன் ஆய்வு செய்து கட்டுப்படுத்துவது, பாதுகாப்பது, சம்பவங்கள் நடக்காமல் தடுப்பு குறித்து திட்டம் அறிவிக்கப்படும்.
2021-இல் பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்தாகவும், அதை அகற்ற வேண்டும் எனவும் தவெக தலைவா் விஜய் கூறியுள்ளாா். ஆனால், 2021 இல் திமுக சரியான ஆட்சியை கொடுத்துள்ளோம் என மக்களே தெரிவித்துள்ளனா். இதற்கு உள்ளாட்சி, மக்களவை மற்றும் இடைத்தோ்தலில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் கொடுத்துள்ளனா்.
நாங்கள் எங்கள் கடமையை முழுமையாக முறையாக சரியாக செய்துகொண்டிருக்கிறோம். தாய்மாா்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்க வேண்டும் என முதல்வா் அக்கறையுடன் செயல்படுகிறாா்.
போக்ஸோ வழக்குகள் பதிவாகுவதால் அவற்றை கண்டுபிடிக்கின்றனா் என்று அா்த்தம். அதற்காக தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அவா்களுடைய வேலையை செய்துகொண்டிருக்கின்றனா். கடைசியில் டாஸ்மாக் நிறுவனத்தில் எந்தவித முறைகேடுகளும் நடக்கவில்லை என்று சொல்லிவிட்டு செல்வாா்கள் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், எம்எல்ஏக்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், வி.சி.சந்திரகுமாா், ஈரோடு மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வே.செல்வராஜ், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அா்பித் ஜெயின், மகளிா் திட்ட அலுவலா் (பொறுப்பு) ரமேஷ், மாவட்ட சமூகநல அலுவலா் சண்முகவடிவு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பூபதி, தாட்கோ திட்ட மேலாளா் அா்ஜுன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.