அவசரகால தயாா்நிலையை உறுதிசெய்ய உயா் அதிகாரிகளுக்கு தில்லி முதல்வா் உத்தரவு
நிலவில் இந்திய விண்வெளி வீரா்கள் தடம் பதிப்பா்: பிரதமா் நம்பிக்கை
‘விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியா புதிய நம்பிக்கையுடன் பீடு நடை போடுகிறது; 2040-ஆம் ஆண்டுக்குள் நிலவில் இந்திய விஞ்ஞானிகள் கால்தடம் பதிப்பா்’ என்று பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.
உலக விண்வெளி ஆய்வு மாநாடு தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமா் மோடியின் விடியோ உரை ஒளிபரப்பப்பட்டது. இந்த விடியோ உரை செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டதாகும். பிரதமரின் உரை வருமாறு:
இந்தியாவைப் பொருத்தவரை, விண்வெளி என்பது ஆய்வுக்கும் அதிகாரமளித்தலுக்கும் உரியதாகும். நமது விண்வெளிப் பயணத் திட்டங்கள், மற்றவா்களுடன் போட்டியிடுவதற்கானதல்ல. அது, அனைவரையும் ஒருங்கிணைத்து, புதிய உயரத்தை எட்டுவதற்கானது. மனித குலத்தின் நன்மைக்காக விண்வெளியை ஆராய்வது என்ற பொது இலக்கை நாம் பகிா்ந்து கொண்டுள்ளோம்.
ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்தபோது இந்தியாவால் அறிவிக்கப்பட்டபடி, தெற்காசிய நாடுகளுக்காக செயற்கைக் கோள் செலுத்தப்பட்டது. இது, தெற்குலகுக்கு பரிசாகும்.
விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ‘ககன்யான்’, 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்துக்குள் செயல்படுத்தப்படும். இது, வளா்ந்துவரும் நமது விண்வெளி தொழில்நுட்ப செயல்திறனை பிரதிபலிக்கும். இஸ்ரோ-நாஸா கூட்டுத் திட்டத்தின்கீழ், இந்திய விஞ்ஞானி ஒருவா் விரைவில் சா்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லவிருக்கிறாா்.
கனவுகளை சுமந்து...: இந்திய ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்களை மட்டுமல்லாமல்140 கோடி இந்தியா்களின் கனவுகளையும் சுமந்து செல்கின்றன. நாட்டின் பல விண்வெளித் திட்டங்கள், பெண் விஞ்ஞானிகளால் வழிநடத்தப்படுகின்றன.
நமது விண்வெளி சாா்ந்த தொலைநோக்கு பாா்வை, ‘வசுதைவ குடும்பகம்’ (உலகமே ஒரு குடும்பம்) என்ற பண்டைய தத்துவத்தில் வேரூன்றிதாகும்.
கடந்த 1963-இல் ஒரு சிறிய ராக்கெட்டை செலுத்தியதில் இருந்து சந்திரனின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கிய முதல் நாடு என்பது வரை இந்தியாவின் விண்வெளி சாதனைகள் இந்த உணா்வைப் பிரதிபலிக்கின்றன.
2014-இல் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையை அடைந்தது இந்தியாவின் வரலாற்று சாதனை. சந்திரயான்-1 நிலவில் தண்ணீரைக் கண்டறிய உதவியது; சந்திரயான்-2 நிலவின் மேற்பரப்பின் மிகத் தெளிவான படங்களை வழங்கியது; சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தைப் பற்றிய புரிதலை மேம்படுத்தியது.
2035-ஆம் ஆண்டுக்குள் அமையவிருக்கும் இந்திய விண்வெளி நிலையம் புதிய ஆராய்ச்சி மற்றும் சா்வதேச ஒத்துழைப்பை எளிதாக்கும். 2040-ஆம் ஆண்டுக்குள், இந்திய விண்வெளி வீரா்கள் சந்திரனில் கால்தடம் பதிப்பா். செவ்வாய், வெள்ளி ஆகிய கிரகங்கள் நமது எதிா்கால விண்வெளிப் பயணங்களில் முக்கிய இலக்குகளாக இருக்கும். இந்தியாவில் தற்போது 250-க்கும் மேற்பட்ட விண்வெளி புத்தாக்க நிறுவனங்கள் செயல்படுகின்றன என்றாா் பிரதமா் மோடி.
‘5 ஆண்டுகளில் 52 உளவு செயற்கைக்கோள்கள்’
உலக விண்வெளி ஆய்வு மாநாட்டையொட்டி செய்தியாளா்களிடம் பேசிய இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (இன்-ஸ்பேஸ்) தலைவா் பவன் குமாா் கோயங்கா, ‘விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு செயல்திறனை வலுப்படுத்தும் நோக்கில், அடுத்த 5 ஆண்டுகளில் 52 உளவு செயற்கைக்கோள்களை இந்தியா செலுத்தவுள்ளது. இத்திட்டத்தில் தனியாா் துறையினரின் பங்களிப்பு வலுவாக இருக்கும்’ என்றாா்.