தயவு செய்து ஓய்வு பெறாதீர்கள்; விராட் கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறாதீர்கள் என விராட் கோலியிடம் முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த மே 7 ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடைபெறும்?
ரோஹித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பின் அதிர்ச்சி நீங்குவதற்குள், விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அடுத்த மாதம் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், அணியில் இரண்டு மூத்த வீரர்கள் இல்லையென்றால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். விராட் கோலியின் ஓய்வு பெறும் விருப்பத்தை மாற்றிக் கொள்ளுமாறு பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
தயவு செய்து ஓய்வு பெறாதீர்கள்
டெஸ்ட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தயவு செய்து ஓய்வு பெறாதீர்கள் என விராட் கோலியிடம் முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு கேட்டுக் கொண்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Virat Kohli please don’t retire.. The Indian team needs you more than ever. You have so much more in the tank. Test cricket will not be the same without you walking out to battle it out for Team India.. Please reconsider..
— ATR (@RayuduAmbati) May 10, 2025
இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தயவு செய்து ஓய்வு பெறாதீர்கள் விராட் கோலி. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அணிக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள். உங்களுக்குள் இன்னும் பல சிறப்பான ஆட்டங்கள் இருக்கின்றன. நீங்கள் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் முன்பு போல் இருக்காது. உங்களது முடிவு குறித்து மீண்டும் ஒருமுறை யோசியுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.