மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாட யஷஸ்வி ஜெய்ஸ்வால் விருப்பம்!
மும்பை அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாட உள்ளதாகக் கூறி கடந்த மாதம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தனது குடும்பத்துடன் கோவாவுக்கு நகரவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க: ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்! ரசிகர்கள் வெளியேற்றம்!
கோவா அணிக்காக விளையாடவுள்ளதாகக் கூறிய ஜெய்ஸ்வாலின் விருப்பத்தினை மும்பை கிரிக்கெட் சங்கமும் உடனடியாக ஏற்றுக் கொண்டது.
இந்த நிலையில், கோவாவுக்கு நகர்வதில் குடும்பத்தின் திட்டங்கள் சிலவற்றை யோசிக்க வேண்டியிருப்பதால், அடுத்த சீசனின் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்து மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு ஜெய்ஸ்வால் கடிதம் எழுதியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: கோவா அணிக்காக விளையாட எனக்கு கொடுக்கப்பட்ட தடையில்லாச் சான்றிதழை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். கோவாவுக்கு நகர்வதற்கு சில குடும்ப திட்டங்கள் குறித்து யோசிக்க வேண்டியிருக்கிறது. அதனால், இந்த சீசனில் மும்பை அணிக்காக விளையாட அனுமதி அளிக்குமாறு மும்பை கிரிக்கெட் சங்கத்தை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். கோவா அணிக்காக விளையாடுவதற்காக பெற்ற தடையில்லாச் சான்றிதழை நான் பிசிசிஐ இடமும் ஒப்படைக்கவில்லை. கோவா கிரிக்கெட் சங்கத்திடமும் ஒப்படைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.