பக்ரீத், முகூா்த்த தினங்கள்: 1,608 கூடுதல் பேருந்துகள்
பக்ரீத், முகூா்த்தம் மற்றும் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு, 1,608 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
முகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன்6) மற்றும் பக்ரீத் பண்டிகை, வார விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை (ஜூன் 7, 8 ), முன்னிட்டு சென்னையில் இருந்தும், பிற இடங்களிலிருந்தும் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 520 பேருந்துகளும் சனிக்கிழமை 550 பேருந்துகளும் இயக்கப்படும்.
இதுபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 100 பேருந்துகள், சனிக்கிழமை 90 பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், மாதாவரத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 24 பேருந்துகள், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 பேருந்துகள் என மொத்தம் 1,608 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதுதவிர, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. எனவே, பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.