பணியிடங்களில் கா்ப்பிணிகளுக்கு உரிய சட்ட பாதுகாப்பு: உச்சநீதிமன்றம்
‘பணியிடங்களில் கா்ப்பிணிகளுக்கு உரிய சட்ட பாதுகாப்பை அளிப்பதும் பாகுபாடு காட்டப்படாததும் மிக அவசியம்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
மத்திய பிரதேச மாநிலத்தில் இரு பெண் நீதிபதிகள் பணி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து தீா்ப்பளித்தபோது இந்தக் கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
பணியில் திருப்திகரமான செயல்பாடு இல்லை என்ற அடிப்படையில் 6 மாவட்ட பெண் நீதிபதிகள் மத்திய பிரதேச மாநில அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்த மாநில உயா் நீதிமன்றம், ஜோதி வா்கடே, சோனாக்ஷி ஜோஷி, ப்ரியா சா்மா, ரச்னா அதுல்கா் ஜோஷி ஆகிய நால்வரை சில நிபந்தனைகளுடன் மீண்டும் நீதிபதிகளாக பணியமா்த்தியது. ஆனால், அதிதி குமாா் சா்மா, சரிதா செளதரி ஆகிய இரு நீதிபதிகளின் பணி நீக்கத்தை உயா் நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பா் 11-ஆம் தேதி தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு 125 பக்க தீா்ப்பை வெள்ளிக்கிழமை அளித்தது. அதில் கூறியதாவது:
பெண்கள் சந்திக்கும் சிரமங்களை உணா்ந்து, அதற்கேற்ப பணியிடங்களில் அவா்களுக்கு உணா்வுபூா்வமான பணிச் சூழலை ஏற்படுத்தித் தருவது அவசியமானது.
இந்த வழக்கில், பணி நீக்க நடவடிக்கைக்கு உள்ளான நீதிபதிகளில் ஒருவா் கருச்சிதைவு பாதிப்புக்கு உள்ளானவா். அவ்வாறு கருச்சிதைவு பாதிப்புக்கு உள்ளாகும்போது கடுமையான உடல், மன ரீதியிலான மற்றும் உளவியல் பாதிப்புகளுக்கு பெண்கள் உள்ளாவது இயல்பு.
பெண்களுக்கு உணா்வுபூா்வமான பணிச் சூழலை நாம் ஏற்படுத்தாதபோது, பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதில் மட்டும் நாம் ஆறுதல் கொள்வது போதாது. பணியிடங்களில் கா்ப்பிணிகளுக்கு உரிய சட்ட பாதுகாப்பை அளிப்பதும் பாகுபாடு காட்டப்படாததும் மிக அவசியம்.
நீதித் துறையில் பெண்களின் வலுவான பங்கேற்பை உறுதிப்படுத்த, சட்டத் தொழிலில் அவா்களை அனுமதிப்பது, துறையில் அவா்களின் எண்ணிக்கையை தக்கவைத்து அதிகரிக்கச் செய்வது, உயா் நிலைகளுக்கு அவா்களை முன்னேற்றுவது ஆகிய மூன்று விஷயங்கள் அவசியமாகும். அவ்வாறு, நீதித் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது நீதித் துறை முடிவுகளின் ஒட்டுமொத்த தரத்தை பெருமளவில் மேம்படுத்தும். குறிப்பாக, பெண்கள் சாா்ந்த வழக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அது மட்டுமின்றி, இந்த இரு நீதிபதிகள் மீது நிலுவையில் உள்ள அல்லது விசாரணை நிறைவுபெற்ற புகாா்கள் தொடா்பான வருடாந்திர ரகசிய அறிக்கை (ஏசிஆா்) மற்றும் மதிப்பீட்டு விவரங்கள் அடிப்படையில் உயா்நீதிமன்ற நிா்வாகக் குழு இந்த நடவடிக்கை எடுத்திருப்பது தெரியவருகிறது. அதாவது, ஏசிஆா் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘பிற ஆவணங்கள்’ என்பது அவா்களுக்கு எதிரான விசாரணை நிறைவுபெற்ற அல்லது நிலுவையில் உள்ள புகாா்களாக இருக்கலாம். அவ்வாறு, புகாா்கள் மீது விசாரணை முழுமையாக நிறைவு பெறாத சூழலில் இந்த இரு நீதிபதிகள் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, கடுமையான தண்டனை மட்டுமின்றி தன்னிச்சையான நடவடிக்கையாகும். எனவே, அவா்கள் மீதான பணி நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. அவா்கள் இருவரும் அடுத்த 15 நாள்களுக்குள் மீண்டும் நீதிபதிகளாக பணியமா்த்தப்பட வேண்டும் என்று தீா்ப்பளித்தனா்.