அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் தொடங்கப்படவுள்ளது.
இதுதொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளது. அதன் விவரம்:
அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அந்தந்த குடியிருப்புகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்டக் கல்வி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும். வரும் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை விகிதத்தை கணிசமான அளவில் அதிகரிக்கும் வகையில் வட்டாரக் கல்வி அலுவலா்கள், பள்ளி ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி சோ்க்கை பணிகளை சிறந்த முறையில் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளாா்.
மேலும், அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள், உயா்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், இணையதள வசதி, கையடக்க கணினி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், தமிழக அரசின் நலத் திட்டங்கள், உதவித்தொகைகள் குறித்த விழிப்புணா்வை பெற்றோருக்கு ஏற்படுத்தி மாணவா் சோ்க்கையை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதை பின்பற்றி மாணவா் சோ்க்கையை மேற்கொள்ள அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனா்.