இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்திய ஐபிஎல் தொடர்: தினேஷ் கார்த்திக்
பல்லடம் மூவர் கொலை; 100 நாள்களைக் கடந்தும் துப்புத் துலங்காத வழக்கு - போலீஸ் விளக்கம் என்ன?!
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 78 வயதான தெய்வசிகாமணி, அவரது மனைவியான 74 வயது நிரம்பிய அலமாத்தாள், 44 வயதான மகன் செந்தில்குமார் ஆகிய மூவரின் தலையும் அடித்து நொறுக்கப்பட்டு ரத்தம் முழுவதும் வெளியேறி கடந்த நவம்பர் 28-ஆம் தேதி சடலமாக கிடந்தனர். மூவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதுடன், அலமாத்தாள் அணிந்திருந்த ஆறு பவுன் நகை மற்றும் செந்தில்குமாரின் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தை உலுக்கிய இந்தக் கொலைகள் தொடர்பாக பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
கொலை நிகழ்ந்த தெய்வசிகாமணியின் வீடு, அவரது தோட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி என சல்லடைபோட்டு போலீஸார் தேடியும் கொலை தொடர்பான சிறு தடயம்கூட போலீஸாருக்கு கிடைக்காதது வழக்கில் பின்னடவை ஏற்படுத்தியது. அத்துடன் தெய்வசிகாமணியின் வீடு சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தின் ஒதுக்குப் புறத்தில் இருந்ததும், அங்கு சிசிடிவி இல்லாததால் சரியான துப்பு கிடைக்காமல் போலீஸார் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தனிப்படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, 5 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் பெட்ரோல் பங்க், மருத்துவமனை, ஜூவல்லரி, பேக்கரி ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி-களைக் கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே, இந்தக் கொலையை ஒப்புக்கொள்ளுமாறு போலீஸார் அடித்து சித்ரவதைபடுத்துவதாக தெய்வசிகாமணி தோட்டத்தில் வேலை பார்த்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பால்ராஜ் கடந்த டிசம்பர் மாதம் உடல் முழுவதும் லத்தியால் அடித்த காயங்களுடன் திருப்பூர் ஆட்சியரிடம் புகார் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பழவஞ்சிபாளையத்தில் வசிக்கும் மற்றொரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று, அடித்து துன்புறுத்தி கொலையை ஒப்புக்கொள்ளுமாறு போலீஸார் மிரட்டியதாக அவர்களும் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். கொலையாளிகளை விடுத்து பட்டியல் சமூகத்தினரை இந்தக் கொலையில் சிக்க வைக்க முயற்சிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் இயக்கங்கள் குற்றம்சாட்டியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டன. அதே நேரத்தில் பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

100 நாள்களைக் கடந்தும் ...
அரசியல் தளத்தில் இருந்து வரும் அழுத்தம், கொலை நிகழ்ந்து 100 நாள்களைக் கடந்தும் குற்றவாளிகள் குறித்து துப்பு துலங்காதது... திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கு பெரும் தலைவலியாக மாறியது. இது தொடர்பாக இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். "கொலை நிகழ்ந்த ஒரு வாரத்துக்குள் குற்றவாளிகளைப் பிடித்துவிடலாம் என்று எண்ணினோம். ஆனால், கொலை நிகழ்ந்த இடம் தொடங்கி 5 கி.மீட்டர் சுற்றளவுக்கு சல்லடைப் போட்டு விசாரித்தும் எங்களுக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை. 2020-ம் தொடங்கி 2023 வரை ஈரோடு மாவட்டம் அரச்சலூர், சென்னிமலை மற்றும் காங்கேயத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த 5 முதியவர்கள் இதே பாணியில்தான் கொலை செய்யப்பட்டனர்.
தோட்டத்து வீட்டில் தனியாக உள்ள முதியவர்களை நோட்டமிட்டு, இருள் சூழ்ந்த ஏகாதசி அல்லது அதையொட்டிய நள்ளிரவில் அவர்களை கொலை செய்துவிட்டு கொள்ளை திட்டத்தை அரங்கேற்றுவார்கள். சிசிடிவி-யில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக வாய்க்காலையொட்டிய பாதையில் நடந்து வந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். வீட்டுக்குள் நுழைந்தவுடன் சத்தம் போடாமல் இருக்க தூக்கத்தில் இருப்போரின் தலையில் இரும்புக் கம்பிகளைக் கொண்டு கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு, உயிர் பிரிவதை பார்த்துவிட்டு நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் செல்வார்கள். அதேபோலத்தான், பல்லடத்திலும் தெய்வசிகாமணி அவரது மனைவி ஆகியோர் மட்டும் டார்கெட் செய்து ஏகாதசி முடிந்து இரண்டாவது நாளான 28-ஆம் தேதி இரவு வந்திருக்க வாய்ப்புள்ளது. அன்றைய தினம் செந்தில்குமார் வீட்டுக்கு வந்ததால் அவரும் பலியாகியுள்ளார். செந்தில்குமாரின் செல்போனை எடுத்து சிம்கார்டை உடைத்து எரிந்துவிட்டு செல்போனை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். சிசிடிவி உள்ளிட்ட பெரிய அளவிலான தடயங்களும் கிடைக்கவில்லை." என்றனர்.

எஸ்.பி.விளக்கம்...
இது தொடர்பாக திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கிரீஷ் யாதவ் அளித்துள்ள விளக்கத்தில், "மூவர் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை செய்து குற்றவாளிகளைக் கைதுசெய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 8 சிறப்பு குழுக்கள் இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை அடையாளம் காணவும், கைது செய்யவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.