புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரி: பக்தா்கள் சுவாமி தரி...
இலங்கை: ரயில் மோதி யானைகள் பலியாவதைத் தடுக்க நடவடிக்கை!
இலங்கையில் ரயில் பாதையில் யானைகள் குறுக்கே வந்து பலியாவைத் தடுக்க அந்நாட்டு ரயில்வே துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்.20 அன்று இலங்கையின் கிழக்கிலுள்ள மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் ஹர்பனா பகுதியில் வந்தபோது, ரயில் பாதையை கடக்க முயன்ற யானைக் கூட்டத்தின் மீது மோதியதில் ரயில் தடம் புரண்டது.
இதில், 6 யானைகள் சம்பவயிடத்திலேயே பலியான நிலையில் 2 யானைகள் படுகாயமடைந்தன. இந்த சம்பவத்தில் அந்த ரயிலில் பயணித்தவர்கள் யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், படுகாயமடைந்த யானைகளில் ஒன்று சிகிச்சை பலனின்றி பலியானது.
இதே இடத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு இதேபோன்ற ஓர் விபத்தில் ரயில் மோதி தாய் யானை ஒன்றும் அதன் 2 குட்டிகளும் பலியாகின.
இதையும் படிக்க:எத்தியோப்பியாவில் காலரா பாதிப்பு: 31 பேர் பலி!
இந்நிலையில், அப்பகுதியில் ரயில் மீது யானைகள் மோதுவதைத் தடுக்க வன விலங்கு ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இலங்கை ரயில்வே அதிகாரிகள் இணைந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து இலங்கை ரயில்வே துறையின் உயர் அதிகாரி பி எஸ் பொல்வட்டாகே கூறுகையில், ரயில்வே துறை அதன் 160 ஆண்டுக்கால வரலாற்றில் இயற்கை வளங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இது போன்ற ரயில் விபத்துகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் 138 யானைகளும் கடந்த 17 ஆண்டுகளில் 1,238 யானைகளும் பலியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ரயில் ஓட்டுநர்களுக்கு சிறந்த தெரிவுநிலையை வழங்குவதற்காக தண்டவாளத்தின் இரு பக்கங்களையும் சுத்தம் செய்வது மற்றும் யானைகள் சிக்கிக் கொள்வதைத் தடுக்க தண்டவாளத்தில் உள்ள இடங்களை நிரப்புவது போன்ற நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டின் கணக்குப்படி இலங்கையில் மொத்தம் 5,800 யானைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.