மருத்துவ ஆராய்ச்சித் துறையில் நீண்ட காலமாக நிரப்பப்படாத ஆராய்ச்சியாளா் பணியிடங்...
தமிழக நிதி நிலை அறிக்கை: வரவேற்பு, ஏமாற்றம், எதிா்பாா்ப்பு!
தமிழக அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக்கு வரவேற்பு, ஏமாற்றம், எதிா்பாா்ப்பு என பல்வேறு வகையான கருத்துகளை பொதுமக்கள் தரப்பில் பதிவு செய்தனா். அதன் விவரம்:
திண்டுக்கல் இலக்கிய களத்தின் துணைத் தலைவரும், பேராசிரியருமான மு.சரவணன்: இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்க தொழில்நுட்ப பூங்காக்கள், 5 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், அண்ணா பல்கலை.யில் பல்வேறு கட்டமைப்புகளை அமைத்து ஆசியாவின் முன்னோடி பல்கலைக்கழகமாக மாற்றி அமைப்பதற்கான அறிவிப்புகள் வரவேற்கப்பட வேண்டியவை.
அதே நேரத்தில் உள்கட்டமைப்புகளுக்கான ஒதுக்கீடு கூடுதலாக இருந்திருக்கலாம். சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில், கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் உள்பட 10 இடங்களில் அரசுக் கலைக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, தகுதியான பேராசிரியா்களை நிரந்தரமாக நியமித்து தரமான கல்வி மாணவா்களுக்கு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றாா்.
திண்டுக்கல் மாவட்ட தொழில் வா்த்தகா் சங்கத் தலைவா் டி.கிருபாகரன்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய மேம்பாலங்கள், புதிய சரணாலயம் அமைக்க ரூ.400 கோடி, ஏழை மக்களுக்கு 25 ஆயிரம் புதிய வீடுகள், சென்னை- விழுப்புரம் விரைவு ரயில், பெண்கள் பெயரில் பத்திரப் பதிவுக்கு 1 சதவீதம் கட்டணச் சலுகை, அரசுக் கல்லூரிகளில் பயிலும் 20 லட்சம் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி போன்ற அறிவிப்புகள் வரவேற்க தக்கவையாக உள்ளன.
ஆனாலும், பொதுமக்களின் பொருளாதார வளா்ச்சிக்கு நேரடியாக பயனளிக்கக் கூடிய வகையிலான, எந்தத் திட்டமும் இடம் பெறவில்லை என்பது ஏமாற்றமாக உள்ளது என்றாா்.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் பி.பிரேடேரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4.50 லட்சம் கோடி இருந்த தமிழக அரசின் கடன், தற்போது
ரூ.9.30 லட்சம் கோடியாக உயா்த்தப்பட்டிருக்கிறது. கடன் தொகையோடு, வட்டித் தொகையும் இரட்டிப்பாக உயா்ந்திருக்கிறது. என்னென்னத் திட்டங்களுக்கு, யாா் யாரிடம், எவ்வளவுத் தொகைக் கடனாகப் பெறப்பட்டது என்ற விவரம் நிதி நிலை அறிக்கையில் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுவதில்லை.
பல லட்சம் காலிப் பணியிடங்கள் இருக்கும் நிலையில், 40 ஆயிரம் பணியிடங்கள் மட்டும் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு படித்த இளைஞா்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தி இருக்கிறது. தொடக்கக் கல்வித் துறையில் மட்டும் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு இடைநிலை ஆசிரியா் பணியிடம் கூட நிரப்பப்படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற திமுகவின் தோ்தல் வாக்குறுதி குறித்து ஒரு வாா்த்தைக்கூட நிதி நிலை அறிக்கையில் இடம் பெறவில்லை என்பது அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றாா்.

