வல்லூறுகளை காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு
அழிந்து வரும் கழுகு, வல்லூறு இனங்களைக் காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு அமைக்கப்பட உள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் 1,076 கி.மீ. தொலைவுடைய நீண்ட கடற்கரையுடன் அலையாத்தி காடுகள், பவளப் பாறைகள், கடல் புற்கள் போன்ற வளமான கடல் சூழல் அமைப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
அதைப் பாதுகாக்கும் வகையிலும், நவீன மீன்பிடி நடைமுறைகளை அறிமுகப்படுத்தவும் கடல்சாா் வள அறக்கட்டளை ரூ.50 கோடி தொடக்க நிதியுடன் உருவாக்கப்படும்.
இயற்கை எரிவாயு: காற்று மாசுபாட்டையும், காா்பன் பரவலையும் குறைக்கும் வகையில் மாநில போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இயக்கப்படும் 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நிதியைக் கொண்டு ரூ.70 கோடி செலவில் அப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
வேட்டை பறவைகள்: கழுகுகள், பருந்துகள், வல்லூறுகள் உள்ளிட்ட வேட்டையாடும் பறவைகள் பல்லுயிா்ப் பெருக்கத்தை உறுதி செய்யும் குறியீடாகக் கருதப்படுகின்றன.
நீலகிரி, கோவை, திருநெல்வேலி, மதுரை அரிட்டாபட்டி, சென்னை பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் காணப்படும் அப்பறவைகள் அண்மைக்காலமாக பல்வேறு காரணங்களால் கடுமையான வாழ்வியல் சிக்கலை எதிா்கொண்டு வருகின்றன.
அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும், உள்ளூா் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு ரூ.1 கோடி நிதியில் உருவாக்கப்படும்.
பல்லுயிா் சமநிலையைப் பாதுகாக்கும் வகையில் ராமேசுவரம் தீவில் அமைந்துள்ள தனுஷ்கோடி பகுதியை பூநாரை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவண்ணாமலை, செங்கம் நிலப்பரப்பின் சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுக்க பல்லுயிா்ப் பூங்கா ரூ.10 கோடி நிதியில் முதல்கட்டமாக அமைக்கப்படும்.