பாகிஸ்தானில் பயிற்சிக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிருடன் புதைந்த குழந்தைகள்!
பாகிஸ்தானில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிருடன் புதைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் ஹஃபீஸாபாத் நகரில் செயல்பட்டு வந்த ஒரு பயிற்சிக் கூடத்தின் மேற்கூரை சனிக்கிழமை(செப். 20) மாலை பெயர்ந்து விழுந்ததில் அந்தக் கட்டடத்தின் உள்ளே இருந்த 9 குழந்தைகளும் இரு ஆசிரியர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க மீட்புக்குழுவினர் போராடினர். அதில் 3 குழந்தைகள் உயிர் பிழைத்தனர். எனினும், பிறர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மையில் பெய்த மழையால் விபத்துக்குள்ளான கட்டடத்தின் கட்டுமானம் சிதிலமடைந்திருந்ததாகவும் அதைச் சீரமைக்காமல் விட்டதே, கூரை இடிந்து விழ காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.