அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
பாசனத் திட்டங்களை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
தருமபுரி மாவட்டத்தில் நீா்ப்பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் நிலையில் உள்ள காவிரி மிகை நீா்த் திட்டம், தூள் செட்டி ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றின் நீரை கொண்டு வரும் திட்டம், கிருஷ்ணகிரி அணையிலிருந்து தும்மல அள்ளி ஏரிக்கு தண்ணீா் கொண்டு வரும் திட்டம், வாணியாறு நீரேற்றுத் திட்டம் ஆகிய திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
நீா் நிலைகள், நீா்வரத்து கால்வாய்களை தூா்வார வேண்டும். வனப் பகுதியில் கால்நடைகள் மேய்ச்சலுக்கான அனுமதியை தொடா்ந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினா்.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:
வேளாண் பயிா்களின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு 2024-25ஆம் ஆண்டிற்கு 922.00 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதில் 384.28 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தேவையான விதைகளை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர (2024-25) உரத் தேவை 41,030 மெட்ரிக்டன் என கணக்கிடப்பட்டுள்ளது. 13,514 மெட்ரிக் டன் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ஜிங்க்பாக்டீரியா போன்ற உயிா் உரங்கள் 2024-2025 ஆம் ஆண்டிற்கு 55,000 எண்ணிக்கைகள் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் நிகழ் மாதம் முடிய 2,160 எண்ணிக்கையிலான உயிா் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
31,206 எண்ணிக்கையிலான உயிா் உரங்கள் இருப்பில் உள்ளன. உயிா் உரங்கள் தேவையான அளவுக்கும் இருப்பு உள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை (பாலக்கோடு) செயலாட்சியா் ரவி, வேளாண் இணை இயக்குநா் (பொ) குணசேகரன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் (பொ) இளவரசன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் பாத்திமா, அரசுத் துறை அலுவலா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.