பாட்லா ஹவுஸ் பகுதி ஆக்கிரமிப்புகளை இடிக்க தடை கோரும் மனுக்கள் மீது உத்தரவு ஒத்திவைப்பு
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: தில்லி பாட்லா ஹவுஸ் பகுதி ஆக்கிரமிப்புகளை இடிக்கத் தடை கோரிய மனுக்கள் மீதான உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இது தொடா்பாக சட்டப்பேரவை ஆம் ஆத்மி உறுப்பினா் அமானத்துல்லா கான் பொது நல வழக்கு தொடா்ந்திருந்தாா். அதை ஜூன் 11-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த வழக்கில் பொதுவாக ஒரு தடை உத்தரவைக் கோருவது இதே விவகாரத்தில் வழக்காடி வரும் தனிநபா்களின் நோக்கத்தை பாதிக்கச் செய்யும் என்று குறிப்பிட்டது.
முன்னதாக, காஸ்ரா 279 என்ற பகுதியில் அங்கீகாரமற்ற இரு கட்டுமானங்கள் உள்பட 11 இடங்களை இடிக்க வேண்டும் என்று தில்லி வளா்ச்சி ஆணையத்துக்கு (டிடிஏ) உச்சநீதிமன்றம் கடந்த மே 7-ஆம் தேதி உத்தரவிட்டது. சா்ச்சைக்குரிய அந்த நிலம் ஓக்லா கிராமத்தின் முராரி சாலையையொட்டி சுமாா் 0.702 ஹெக்டேரில் அமைந்துள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி பாட்லா ஹவுஸ் பகுதியின் அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் மீது இடிப்புக்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டன.
இதற்கிடையே, ஆக்கிரமிப்புகளை இடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று சில குடியிருப்புவாசிகள் தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகினா். அதற்கு எதிராக தில்லி வளா்ச்சி ஆணையமும் நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த வழக்கு நீதிபதி நீதிபதி தேஜஸ் கரியா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பாட்லா ஹவுஸ் பகுதியின் இரண்டு சொத்துகள் பிரதமா்-உதய் திட்டத்தின் கீழ் வருவதாக தில்லி வளா்ச்சி ஆணையம் கூறியது. மேலும், 279 -இல் உள்ள 43 பிகா நிலத்தில் பாட்லா ஹவுஸ் பகுதி பரவியுள்ளது என்றும் அதில் ஒன்பது பிகா நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டவை என்றும் டிடிஏ வாதிட்டது.
இந்த விவகாரத்தில் மனுதாரா்களில் ஒருவரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அமானத்துல்லா கான் சாா்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞா் சல்மான் குா்ஷித், மீதமுள்ள நிலம் பிரமதரின் உதய் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் போனது ஏன் என்று கேள்வி எழுப்பினாா்.
மனுதாரா்களின் செயலுக்கு ஆட்சேபம் தெரிவித்த டிடிஏ, முதலில் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு விட்டு பிறகு இந்த மனுதாரா்கள் உயா்நீதிமன்றத்தை நாடி நிவாரணம் கோருவது ஏற்புடையதல்ல என்று வாதிட்டது.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப்பெற விரும்புவதாக மனுதாரா்கள் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மனுவைத் திரும்பப்பெற்று அத்தகவலை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் அதன் பிறகு உத்தரவை பிறப்பிப்பதாக உயா்நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டாா்.