மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்
பாதுகாப்பான ஆட்டு பட்டிகளை அமைக்க விவசாயிகளுக்கு அமைச்சா் சு.முத்துசாமி வேண்டுகோள்
பாதுகாப்பான ஆட்டு பட்டிகளை அமைத்து தெருநாய்களிடமிருந்து ஆடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வேண்டுகோள் விடுத்தாா்.
ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் தெருநாய்கள் கடித்து ஏராளமான கால்நடைகள் கடந்த சில மாதங்களாக உயிரிழந்தன. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், இழப்பீடு கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்ததுடன், பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனா். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுக்கு ரூ.6 ஆயிரம், கோழிக்கு ரூ.200 இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
இந்நிலையில், ஈரோடு பெரியாா் நகரில் விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா்.
இழப்பீடு பெற்றுக்கொடுக்க உதவியாக இருந்த அமைச்சா் சு.முத்துசாமிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா். இதில் ஈரோடு, திருப்பூா் மாவட்ட விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்கு அறிந்து வைத்திருந்தாா். இதனால் தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீட்டை அவா் அறிவித்தாா். தெருநாய்களின் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். தெருநாய்களைக் கட்டுப்படுத்த அரசின் சாா்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்ட விதிகள், நீதிமன்ற உத்தரவின்படி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு சுற்றறிக்கையும் அனுப்பி உள்ளாா்.
தமிழக நிதிநிலை அறிக்கையில் தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெருநாய்களின் பாதிப்பு அதிகமாக உள்ள 100 இடங்களில் கருத்தடை மையம் அமைக்கப்பட உள்ளது. அதேசமயம் தெருநாய்களிடமிருந்து இருந்து கால்நடைகளைக் காப்பாற்ற விவசாயிகளும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.
ஆட்டு பட்டியை சிறப்பாக அமைத்துவிட்டு கதவை கயிறுகளால் கட்டி இருந்ததால் தெருநாய்கள் உள்ளே புகுந்து ஆடுகளை கடித்துக் கொன்றதை காண முடிந்தது.
விவசாயிகளுக்கு மாதிரி பட்டியை அமைத்து காண்பித்து உள்ளோம். அதேபோல, பாதுகாப்பான பட்டிகளை அமைத்து கால்நடைகளை வளா்க்க வேண்டும் என்றாா்.