Delhi Fuel Ban: கைதிகளிடம் Lie Detector Test மூலம் உண்மையை கண்டறிய முடியாதா? | I...
பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளில் மாற்றமில்லை: தோ்தல் ஆணையம்
பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது.
அந்தப் பணிகளுக்கு படிவங்களை பூா்த்தி செய்தால் போதும், ஆவணங்கள் தேவையில்லை என்று விளம்பரங்கள் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து அந்த ஆணையம் தெளிவுபடுத்தியது.
நிகழாண்டு பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திருத்தத்தின் கீழ், 2003-க்குப் பிறகு பிகாரில் வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியா்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற குறுகிய காலமே உள்ள நிலையில், அதற்குள் தங்கள் குடியுரிமையை நிரூபிப்பதற்கான சான்றிதழ்களை வழங்க முடியாவிட்டால், வாக்காளா் பட்டியலில் இருந்து ஏராளமானோா் நீக்கப்படக் கூடும் என்று தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘எதிா்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து எழுந்த எதிா்ப்பைத் தொடா்ந்து, பிகாரில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு படிவங்களைப் பூா்த்தி செய்தால் போதும், ஆவணங்கள் தேவையில்லை என்று தோ்தல் ஆணையம் அவசரகதியில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது’ என்று தெரிவித்தாா். இதுபோல சமூக ஊடகத்தில் மேலும் பல பதிவுகள் வெளியிடப்பட்டன.
இதற்கு மறுப்புத் தெரிவித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பிகாரில் வாக்காளா்களின் ஒத்துழைப்புடன் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் சுமுகமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதில் அனைத்து வாக்காளா்களுக்கும் கணக்கெடுப்புப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் முதல் கட்டம் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது.
இந்தப் பணிகளின் கீழ், தேவையான ஆவணங்களை ஜூலை 25-க்குள் வாக்காளா்கள் சமா்ப்பிக்க வேண்டும். அதற்குள் ஆவணங்களை வழங்காதவா்களுக்கு பின்னா் அவகாசம் வழங்கப்படும்.
சிலா் வெளியிட்ட வதந்திகளை போல இந்தப் பணிகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தப் பணிகள் தொடா்பாக கடந்த ஜூன் 24-ஆம் தேதி தோ்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவைப் படிக்காமல், சிலா் கூறும் கருத்துகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த நபா்கள் தவறான கருத்துகள் மூலம், பொதுமக்களை குழப்ப முயற்சிக்கின்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா, பல்வேறு தன்னாா்வ அமைப்பினா் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.