பிரதமரை அவமானப்படுத்திய முதல்வருக்கு கண்டனம்: அண்ணாமலை
தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் அவமதித்து விட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல். முருகன், வானதி ஸ்ரீனிவாசன், ஹெச். ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ராமேசுவரம் சென்றிருந்தனர்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது, இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி, தில்லிக்குகூட செல்லாமல், நமக்காக ரூ. 8,300 கோடி மதிப்பிலான திட்டங்களைக் கொடுப்பதற்காக தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அப்படியிருக்கையில், பிரதமரை வரவேற்பது என்பது நமது பிரதிநிதியான தமிழக முதல்வரின் தலையாயக் கடமை. ஆனால், இந்த விஷயத்தில் முதல்வர் அரசியல் செய்துவிட்டு, ராமேசுவரத்தில் வெயில் அதிகமாக இருப்பதால், ஊட்டிக்கு சென்று விட்டார்.
முதல்வருக்கு வெயில் தாங்காதுபோல. அதனால், ஊட்டி குளிரில் இதமாய் பதமாய் இருக்கலாம் என்று அங்கு சென்று விட்டார். இதனை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறோம். தனது கடமையைச் செய்ய முதல்வர் தவறி விட்டார். தமிழக மக்களுக்காக பணியாற்ற வந்த பிரதமரை முதல்வர் அவமானப்படுத்தி இருக்கிறார். அதற்காக, தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, தமிழகம் வந்திருக்கும் பிரதமர், தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச வேண்டும் என்று முதல்வர் கோரியிருக்கிறார். ஒருவேளை, பிரதமர் பேசவில்லையென்றால், அவரைத் திரும்ப செல்ல விடமாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், முதல்வரின் தொகுதி மறுசீரமைப்பு நாடகத்தை தமிழக மக்கள் உணர்ந்து விட்டனர். தொகுதி மறுசீரமைப்பு அறிவிப்பு வருகையில், எந்த மாநிலத்துக்கும் ஏற்றமோ இறக்கமோ இருக்காது என்று பாஜக அரசு கூறிவிட்டது. ஆகையால், இதை ஒரு காரணமாக வைத்து, ஊட்டியில் முதல்வர் ஒளிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. மாநிலத்தின் நலனில் அக்கறை இருந்திருந்தால், முதல்வர் இன்று வருகை தந்திருக்க வேண்டும். ஆனால், வரவில்லை.
அரசு நிகழ்ச்சி என்பதால்தான், மேடைக்குப் பின்னால் இருந்தேன். மக்களின் வரிப்பணத்தில் நடக்கக்கூடிய அரசு நிகழ்ச்சியில் எனக்கு வேலையில்லை. பாஜக தலைவர் போட்டியில் நானில்லை. நீட் தேர்வு ரகசியம் என்று கூறி, ஆட்சிக்கு வந்தார்கள். நான்கு வருடம் ஆகிவிட்டது, இன்னும் என்ன ரகசியம்.
மற்ற கட்சிகள் எப்படி கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறும் அளவுக்கு, நமது முதல்வர் வேலையில்லாமல் இருக்கிறார் என்று பாருங்கள். எங்கிருந்தாலும் எனது பணியை செய்யத்தான் போகிறேன். பதவி வந்தாலும் மாற மாட்டேன்; வராவிட்டாலும் மாற மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:தமிழக தலைவர்கள் பலர் தமிழில் கையெழுத்திடுவதில்லை: பிரதமர் மோடி