படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.ம...
மதுரை: `பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம்'- `பகீர்' கிளப்பும் ரூ.24 கோடி மோசடி!
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம் எனக் கூறி 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீஸ்காரர் குடும்பத்தினர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ள சம்பவம், மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், கடச்சனேந்தலில் வசிக்கும் புதூரில் போலீஸாகப் பணிபுரிந்து வருபவர் ரமேஷ் தங்கராஜ். இவர் மனைவி பிரேமலதாவுடன் 'குயின் டிரேடிங்' என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி, அதை சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து சமீபத்தில் மதுரையிலுள்ள ஹோட்டலில் கூட்டம் நடத்தியுள்ளனர். அதில் கலந்துகொண்டவர்களிடம், `எங்கள் நிறுவனம் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம்' என ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர்.
இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்தவர்களும் மதுரை , கோயம்புத்தூர், சேலம், திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துககும் மேற்பட்டவர்களை 5 லட்சம் முதலாக 20 லட்சம் வரை முதலீடு செய்ய வைத்துள்ளனர்.
இந்த நிலையில் முதலீடு செய்தவர்களுக்கு முதல் 3 மாதங்களுக்கு லாபத் தொகையினை வழங்கியுள்ளனர். ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் முதல் லாபத் தொகை வழங்கவில்லை. அதனால் முதலீட்டை திருப்பி கேட்டவர்களிடம் பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக இருவரும் கூறியுள்ளனர்.

ஆனால், பிப்ரவரி 24ஆம் தேதி முதல் இருவரையும் சந்திக்க முடியவில்லை என்று கூறும் பாதிக்கப்பட்டவர்கள், "அவர்கள் மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், எஸ்.பி ஆகியோரிடம் புகார் அளித்ததுடன் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்தோம். ஆனால், இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொருவரும் 20 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து ஏமாற்றமடைந்து நிற்கிறோம். எனவே கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் கலெக்டரிடம் முறையிட்டுள்ளோம். மோசடி செய்த ரமேஷ் தங்கராஜ் புதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்ததால் அவரை நம்பி பணம் செலுத்தினோம். ஆனால் அவரும் அவரது மனைவியும் சேர்ந்து எங்களை ஏமாற்றி விட்டார்கள். எனவே எங்களுடைய பணம் கிடைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர்