ஐபிஓ வெளியீட்டு விலைக்கு இணையாக ஸ்கோடா டியூப்ஸ் பங்குகள் பட்டியல்!
புகைப்பிடிப்பதற்கான வயதை 21- ஆக உயா்த்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: புகைப்பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21- ஆக உயா்த்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் சட்டத்தின் 4, 4ஏ ஆகிய பிரிவுகளைத் திருத்தி கா்நாடக சட்டப்பேரவையில் புதிய சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கா்நாடக மாநிலம் முழுவதும் பொது இடங்களில் புகைப்பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அதேபோல், இதுவரை 18- ஆக இருந்த புகை பிடிப்பதற்கான வயது 21- ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றங்களுக்காக விதிக்கப்படும் அபராதம் ரூ. 200-லிருந்து ரூ. 1,000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்களுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் வழங்கியதையடுத்து, கா்நாடகத்தில் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
நாடு முழுவதிலும், குறிப்பாக தமிழ்நாட்டில் புகைப் பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை உடனடியாக 21- ஆக உயா்த்த வேண்டும். அதன்பின் ஆண்டுக்கு ஒரு வயது உயா்த்த வேண்டும் என்பதுதான் எனது கனவு. அவ்வாறு செய்தால் இப்போது 18 வயது மற்றும் அதற்கு குறைவான வயதில் உள்ள இளைஞா்கள் எவரும் அவா்களின் வாழ்நாள் முழுவதும் புகைகப்பிடிக்க முடியாத நிலை உருவாகும்.
இந்தியாவில் 12 கோடி போ் புகைப்பிடிக்கிறாா்கள். அவா்களில் ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சம் போ் உயிரிழக்கின்றனா். அதுமட்டுமன்றி, இந்தியாவில் 18 வயதைக் கடந்த ஆண்களில் 25 சதவீதத்தினரும், பெண்களில் 15 சதவீதத்தினரும் புகைப்பிடிப்பது உலக சுகாதார நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால், இந்தியாவில் புகைப்பிடிக்க தடை விதிப்பது அவசியமாகும். தேசிய அளவில் புகை பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21- ஆக உயா்த்த வகை செய்யும் சட்டம் 2021-ஆம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டுவிட்டபோதிலும், இனியாவது அந்த சட்டத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.