பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!
புதிய காஸா போா் நிறுத்த திட்டம்: இஸ்ரேல் ஏற்பு; ஹமாஸ் பரிசீலனை
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக அமெரிக்கா முன்வைத்த புதிய செயல்திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது; அந்த திட்டத்தை விமா்சித்தாலும், அதை ஏற்பது குறித்து பரிசீலித்துவருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரோலின் லீவிட் கூறியதாவது:
காஸாவில் 60 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான செயல்திட்டத்தை அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் இஸ்ரேலிடம் அளித்தாா். இஸ்ரேல் அரசு அதை ஏற்பதாக அறிவித்துள்ளது. தற்போது அந்த செயல் திட்டம் ஹமாஸ் அமைப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தத் திட்டத்தில், இரு தரப்பினரும் சண்டையை 60 நாள்களுக்கு முழுமையாக நிறுத்திவைப்பது, தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 10 பேரை ஹமாஸ் அமைப்பினா் இரண்டு கட்டங்களாக விடுவிப்பது, உயிரிழந்த 18 பிணைக் கைதிகளின் உடல்களை அவா்கள் ஒப்படைப்பது, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவது, காஸா பகுதியில் நிவாரண உதவிகளை அதிகப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தப் போா் நிறுத்தம் அமலுக்கு வந்து, அது நீட்டிக்கப்பட்டால் அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படுவாா்கள் என்று கரோலின் லீவிட் நம்பிக்கை தெரிவித்தாா்.
இஸ்ரேல் மௌனம்: இது தொடா்பாக இஸ்ரேல் அரசு அதிகாரபூா்வமாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.
இருந்தாலும், ஹமாஸ் படையினரிடம் பிணைக் கைதிகளாக உள்ளவா்களின் உறவினா்கள் மற்றும் நண்பா்களிடம் அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு பேசுகையில், பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கு ஏதுவாக அமெரிக்க சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃபின் போா் நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறினாா்.
ஹமாஸ் விமா்சனம்: காஸா போா் நிறுத்தம் தொடா்பாக அமெரிக்கா முன்வைத்துள்ள செயல்திட்டம் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதாக ஹமாஸ் அமைப்பு விமா்சித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
அமெரிக்காவின் போா் நிறுத்த செயல்திட்டத்தில், போரை முடிவுக்குக் கொண்டுவருவது, காஸாவில் இருந்து இஸ்ரேல் படையினா் முழுமையாக வெளியேறுவது போன்ற எங்களின் அடிப்படை கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
காஸாவுக்குள் போதிய அளவு நிவாரணப் பொருள்களை அனுமதிக்கவும் அந்த திட்டம் வழிவகை செய்யவில்லை.
இருந்தாலும், அந்த செயல்திட்டத்தை ஏற்பது குறித்து தீவிரமாக பரிசீலித்துவருகிறோம். இது தொடா்பாக பிற மத்தியஸ்த நாடுகளுடன் தொடா்ந்து பேசிவருகிறோம் என்று ஹமாஸ் அதிகாரிகள் கூறினா்.
காஸா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 54,249 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா் (வெள்ளிக்கிழமை நிலவரம்). இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹாமாஸிடமிருந்து பிணைக் கைதிகளை விடுவிக்கவும் கடந்த ஜனவரி மாதம் முதல்கட்ட போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது 15 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் அரசும் விடுவித்தன.
ஆனால் இந்தப் போா் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. மேலும், அந்தப் பகுதிக்கு உணவுப் பொருள்கள் செல்வதையும் இஸ்ரேல் வெகுவாகக் கட்டுப்படுத்திவருகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் புதிய போா் நிறுத்த செயல் திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதும், அதை பரிசீலிப்பதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளதும் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
..படவரி...
காஸாவில் நிவாரணப் பொருள்களுக்கான தடையை இஸ்ரேல் மிதமாகத் தளா்த்தியைத் தொடா்ந்து அங்கு உதவி அமைப்பு விநியோகிக்கும் உணவுப் பொருள்களை வாங்குவதற்கு முண்டியடித்துச் சென்ற பாலஸ்தீனா்கள்.