புதுகையில் ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
மருத்துவச் செலவு முழுவதையும் மீளப் பெறும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா. சரவணன் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாநில இணைச் செயலா் க. கருப்பையா, மாவட்ட இணைச் செயலா் ஏ. கணேசன் உள்ளிட்டோா் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், மருத்துவச் செலவு முழுவதையும் மீளப் பெறும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். 70 வயது பூா்த்தியான ஓய்வூதியா்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் 80 வயதை எட்டியவா்களுக்கு 20 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணச் சலுகையை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.