சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்வு; உபரிநீர் திறப்பு |...
`பொண்டாட்டிகளையும் இலவசமாக தருவார்கள் என்கிறார்!’- சி.வி.சண்முகத்தை வறுத்தெடுத்த அமைச்சர் கீதா ஜீவன்
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒப்பிட்டு அருவருக்கத்தக்க ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.
`தேர்தலுக்குப் பல அறிவிப்புகள் வரும். பொண்டாட்டிகளையும் இலவசமாக தருவார்கள்’ என பெண்களை கொச்சைப் படுத்தியிருக்கிறார். ஒரு அரசியல்வாதியாக இல்லை.
அடிப்படையில் மனிதராக இருக்கவே தகுதியற்றவர் சி.வி.சண்முகம். ஜெயலலிதா இருக்கும்போது சி.வி.சண்முகம் இப்படி பேசியிருக்க முடியுமா ?

அவரை இருக்கும் இடம் தெரியாமல் அரசியலை விட்டே அப்புறப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. ஆனால் ஆளுமை இல்லாத எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகத்திற்கு ஒரு கண்டிப்பைக் கூட தெரிவிக்கவில்லை.
பெண்கள் பயணம் செய்யும் மகளிர் விடியல் பயணப் பேருந்துகளை லிப்ஸ்டிக் பூசிய பேருந்துகள் எனக் கேவலமாகப் பேசிய, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அடிவருடி சி.வி.சண்முகத்தின் நாக்கில் நாராசம்தானே வரும்.
தமிழ்நாடு முதல்வர் பெண்களுக்காக பார்த்துப் பார்த்து செய்யும் மகத்தான திட்டங்களால் பெண்களிடம் அசைக்க முடியாத செல்வாக்கை பெற்றிருக்கிறார். அது அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் அடிவயிற்றை பிசைந்து கொண்டிருக்கிறது.
அதனால்தான் பெண் இனத்தை குறிக்கும் வகையில் `பொண்டாட்டி இலவசம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்கள். கெட்ட வார்த்தைகளில் திட்டுவதற்குக் கூட பெண் இனத்தைப் பயன்படுத்தும் கேடு கெட்டவர் சி.வி.சண்முகம்.
தமிழ்நாட்டில் பெண்களுக்காக நடைமுறையில் இருக்கும் திட்டங்கள், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருப்பதைவிட முன்னோடியானவை.
அதனால்தான் இப்போது இந்தியாவில் பல மாநிலங்களில் மகளிருக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்களை அவதூறாகப் பேசிய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த வரலாறுகள் உண்டு” என்று காட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

அமைச்சர் கீதா ஜீவன் முன்னாள், அமைச்சர் சி.வி.சண்முகத்தை இப்படி கடுமையாக விமர்சித்திருப்பதற்கு காரணம் இதுதான். தற்போது ராஜ்யசபா எம்.பி-யாக இருக்கும் சி.வி.சண்முகம், கடந்த 11.10.2025 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ``பொங்கல் முடிந்ததும் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும். அதற்கு இன்னும் மூன்று நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில், பல அறிவிப்புகள் வரும். மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு.. ஏன் ஓட்டு போட்டால் ஆளுக்கொரு பொண்டாட்டியைக் கூட இலவசமாகக் கொடுப்பார்கள்” என்றார்.
அதுதான் தற்போது பெண்கள் அமைப்புகள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. `பெண்களை இலவசத்துடன் ஒப்பிட்டுப் பேசிய சி.வி.சண்முகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாதர் சங்கத்தினர் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுப்போம்’ என்று விழுப்புரம் மாவட்ட அனைத்திந்திய மாதர் சங்கம் அறிவித்திருக்கிறது.