`முதல்வருக்கு களங்கம் ஏற்படக்கூடாதுனு அமைதியா.!' - துரைமுருகன் பேச்சால் செல்வப்ப...
மண்புழு உர நீர் தயார் செய்வது எப்படி? வாழையில் வேர் அழுகல் நோய்க்கு இயற்கை தீர்வு...
“நான், 3 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளேன். கன்றுகள் நடவு செய்து 5 மாதங்கள் ஆகின்றன. தற்போது பெய்து வரும் கனமழையால், என் தோட்டத்தில் 4 நாள்களாகத் தண்ணீர் தேங்கியுள்ளது. வேர் அழுகல் ஏற்படாமல் இருக்க, இயற்கை முறையில் என்ன செய்யலாம்?”
- @ துரைராஜ், கும்பகோணம்.
திருச்சியில் இயங்கி வரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர், முனைவர் செல்வராஜன் பதில் அளிக்கிறார். “வாழைத் தோட்டத்தில் மழைநீர் தேங்கினால், மண்ணில் காற்றோட்டம் தடைப்படும். இதனால், வேர்களுக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்காது. எனவே, முதல்கட்ட நடவடிக்கையாக, தண்ணீரை நன்கு வடிய விட வேண்டும். ஓரிரு நாள்கள் வெயில் அடித்த பிறகு, தற்காப்பு நடவடிக்கையில் இறங்கலாம். வாழைக்கு மிகவும் அவசியமானது, பொட்டாசியம் சத்து. வாழைத்தோட்டங்களில் மழைநீர் தேங்கினால், முதலில் ஏற்படும் பாதிப்பு, பொட்டாசியம் குறைபாடு. மழைவெள்ளத்தால், மண்ணில் உள்ள பொட்டாசியம் சத்து வெளியேறும். அதைத் தொடர்ந்து கால்சியம், மெக்னீசியம் ஆகிய பேரூட்டச் சத்துகளும் வெளியேறும்.

இக்குறைபாட்டால், வாழை மரத்தின் கீழ்ப் பகுதியில் உள்ள முதல் 3 இலைகள் மஞ்சள் நிறத்துக்கு மாறும். அவற்றை வெட்டி, அப்புறப்படுத்த வேண்டும். பேரூட்டச் சத்துகளின் குறைபாடு, மேலும் சில நாள்களுக்கு நீடித்தால், வேர் அழுகல் நோய் ஏற்பட்டு… கிழங்கு, தண்டு, இலைகள் ஆகியவை பாதிக்கப்படும். எனவே, இப்பிரச்னையை சரி செய்ய, ஒரு மரத்துக்கு 2 கிலோ வீதம் நெல் உமி சாம்பல், தலா 250 கிராம் கடலைப்பிண்ணாக்கு, வேப்பம்பிண்ணாக்கு ஆகியவை இட வேண்டும். நெல் உமி சாம்பலில் பொட்டாசியம், பாஸ்பரஸ், நைட்ரஜன் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. குறிப்பாக, சிலிக்கான் சத்து அதிக அளவில் இருக்கும். இது, வேர்களின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும். மழைநீர் தேங்குவதால் ஏற்படும் பேரூட்டச் சத்துகளின் குறைபாட்டை, விரைவாக நிவர்த்தி செய்ய, இயற்கையாக எடுக்கப்படும் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் சல்பேட் ஆகியவற்றின் கூட்டுக் கலவை உரத்தைப் பயன்படுத்தலாம்.”
தொடர்புக்கு:
இயக்குநர், தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், திருச்சி. செல்போன்: 98432 78364
“நான், 10 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். மண்புழு உர நீர் தயார் செய்து… நெல், நிலக்கடலை, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களுக்குப் பயன்படுத்த விரும்புகிறேன். இதன் பயன்கள் மற்றும் உற்பத்தி முறை குறித்த விவரங்கள் தேவை. மண்புழு உர நீர் தயார் செய்வதற்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்த எவ்வளவு செலவாகும்?”
- @ ஜெயராமன், விழுப்புரம்.
கன்னியாகுமரியில் இயங்கி வரும் விவேகானந்தா கேந்திரம் அமைப்பின் இயற்கை வள அபிவிருத்தித் திட்ட இயக்குநர் ராமகிருஷ்ணன் பதில் அளிக்கிறார்.

“மண்புழு உர நீரின் மகத்துவம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறோம். இதை எளிய முறையில் தயார் செய்வதற்கான பயிற்சியும் அளித்து வருகிறோம். மண்புழு உரத்தை விடவும், மண்புழு உர நீரில் சத்துகள் அதிகம். இது, அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மண்புழு உரத்துக்கும், மண்புழு உர நீருக்குமான வேறுபாடு குறித்து அறிந்துகொள்வது அவசியம். மண்புழுக்கள், தங்களின் உணவை உட்கொண்டு வெளியேற்றும் கழிவுதான் மண்புழு உரம். மண்புழுக்களின் உடலில் சுரக்கக்கூடிய ‘செலோமிக்’ என்ற திரவமும், நாம் கொடுக்கும் தண்ணீரும் ஒன்றாகக் கலந்து மண்புழு உர நீராகக் கிடைக்கும். மண்புழுக்களின் உணவுப்பாதையில் சுரக்கும் பல்வேறு வகையான என்சைம்கள், அமினோ அமிலங்கள் ஆகியவை இந்த உரநீரில் அடங்கியிருக்கும்.
இதைப் பயிர்களுக்குக் கொடுப்பதன் மூலம், பயிர்களுக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்துகள் கிடைக்கும். இயற்கை விவசாயிகள் பலர், இதைப் பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுத்தி அதிக விளைச்சல் எடுத்து வருகிறார்கள்.


மண்புழு உரநீர் உற்பத்திக்கான கட்டுமானம் ஏற்படுத்த, காற்றோட்டமும் நிழலும் உள்ள இடத்தைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். அந்த இடத்தில் 6 அடி அகலம், 6 அடி நீளம், 1 அடி உயரம் கொண்ட சிமென்ட் மேடை அமைக்க வேண்டும். மண்புழு உர நீர் எளிதாக வடிந்து வருவதற்கு ஏற்ற வகையில் தரையைச் சற்று சாய்வாக அமைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, மேடையைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் 6 அடி உயரத்துக்கு வலை அமைப்பை ஏற்படுத்த வேண்டும். குறைவான இடைவெளி கொண்ட பிளாஸ்டிக் வலை மற்றும் மூங்கில் கம்புகளைப் பயன்படுத்தி இதைக் கட்டமைக்கலாம் (புகைப்படங்களைப் பார்த்தால், எவ்வாறு வலை அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது உங்களுக்குத் தெளிவாகப் புரியும்).
மண்புழு உர நீர் தயார் செய்ய… மாட்டு எரு, இலை-தழைகள் அதிக இடைவெளி கொண்ட பிளாஸ்டிக் சாக்குகள் (வெங்காய மூட்டை கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சாக்குகள்), மூடியுடன்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், மண்புழுக்கள் ஆகியவை தேவை.


வலை கட்டுமானத்துக்குள் அரையடி உயரத்துக்கு எரு மற்றும் இலை-தழைகளைப் போட வேண்டும். ஆங்காங்கே, மூடியுடன்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களை இழை-தழைகளுக்குள் அமுக்கி செங்குத்தாக நிறுத்தி வைக்க வேண்டும். சுமார் 20 பாட்டில்கள் தேவைப்படும். அதிக விலை கொடுத்து புதிய பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட தண்ணீர் பாட்டில்களைக்கூட பயன்படுத்தலாம்.
இவ்வாறு பிளாஸ்டிக் பாட்டில்களை ஆங்காங்கே செங்குத்தாக நிறுத்தி வைப்பதன் மூலம், மண்புழுக்களுக்குப் போதுமான காற்றோட்டம் கிடைப்பதோடு, உர நீர் எளிதாக கீழே இறங்கும். பாட்டில்கள் அமைத்த பிறகு, பிளாஸ்டிக் சாக்குகளில் எரு மற்றும் இலை-தழைகளை நிரப்பி 10 மூட்டைகள் தயார் செய்து, அவற்றை கிடைமட்டமாக அடுக்கி வைக்க வேண்டும். இதுதான் முதல் அடுக்கு.


முதல் அடுக்கு தயார் செய்த பிறகு, அதன்மீது அரையடி உயரத்துக்கு எரு மற்றும் இலை-தழைகளை நிரப்பி, ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்டில்களை செங்குத்தாக நிறுத்தி வைத்து, அவற்றின் மீது, ஏற்கெனவே சொன்னதுபோல் மூட்டைகள் தயார் செய்து கிடைமட்டமாக அடுக்கி வைக்க வேண்டும். இது இரண்டாவது அடுக்கு. இதுபோல் மொத்தம் 6 அடுக்குகள் அமைக்க வேண்டும். பிறகு, வலை அமைப்பின் மேற்பகுதி வழியாகச் சொட்டுநீர்க் குழாய் மூலம் தொடர்ச்சியாக மூன்று நாள்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். இதன்மூலம், எரு மற்றும் இலை-தழைகளில் உள்ள உஷ்ணம் தணியும். இதைத் தொடர்ந்து 5 கிலோ மண்புழுக்களை, 6-வது அடுக்கின் மேற்பரப்பில் விட வேண்டும். வெயில் படாமல் இருக்கவும், மண்புழுக்களைப் பறவைகள் கொத்திச் செல்லாமல் இருக்கவும் தென்னங்கீற்றுகளைப் போட்டு மூடி வைக்க வேண்டும்.
தினமும் 5 மணி நேரம் சொட்டுநீர்க் குழாய் மூலம் தண்ணீர் கொடுக்க வேண்டும். கட்டுமானம் அமைத்ததிலிருந்து 6 நாள்கள் வரை வலை அமைப்பிலிருந்து வெளியேறும் நீரைச் சேகரிக்க வேண்டாம். 7-வது நாளிலிருந்தது மண்புழு உர நீரைச் சேகரிக்கலாம். தினமும் 200 லிட்டர் அளவுக்குக் கிடைக்கும்.


10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் வீதம், மண்புழு உர நீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். பாசன நீரிலும் கலந்து விடலாம். 3-வது மாதம், கட்டுமானத்தின் உயரம் குறைந்து காணப்படும். அப்போது மீண்டும் 2 முதல் 3 அடுக்குகள் அமைக்கலாம். மொத்தம் 6 மாதங்கள் வரை மண்புழு உர நீர் சேகரிக்கலாம். அதன்பிறகு, கட்டுமானத்தைப் பிரித்துவிட வேண்டும். 1.5 டன் முதல் 2 டன் மண்புழு உரமும், 8 கிலோ முதல் 10 கிலோ வரை தரமான மண்புழுக்களும் கிடைக்கும். மண்புழு உரநீர் கட்டுமானம் அமைக்க, 5,000 - 6,000 ரூபாய் செலவாகும்.”

தொடர்புக்கு:
இயக்குநர், இயற்கை வள அபிவிருத்தி திட்டம்,
விவேகானந்தா கேந்திரம், விவேகானந்தாபுரம்,
கன்னியாகுமரி - 629 702,
செல்போன்: 94426 53975,
தொலைபேசி: 04652 246296

“முயல் பண்ணை அமைக்க முடிவு செய்துள்ளேன். இதற்கான பயிற்சி எங்கு கிடைக்கும்?”
- @ ராஜதுரை, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்.
“திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இயங்கிவரும் தென் மண்டல செம்மறியாடு மற்றும் உரோம ஆராய்ச்சி மையத்தில் இதற்கான நேரடி செயல் விளக்கப் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு 1,500 ரூபாய் பயிற்சிக் கட்டணம். ரகத் தேர்வு, தாய் முயல்கள் மற்றும் ஆண் முயல்கள் தேர்வு செய்தல், கொட்டகை மற்றும் கூண்டுகள் அமைத்தல், தீவன மேலாண்மை, நோய்த் தடுப்பு முறைகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.”
தொடர்புக்கு:
தென் மண்டல செம்மறியாடு மற்றும் உரோம ஆராய்ச்சி மையம், மன்னவனூர், கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம். செல்போன்: 99433 71164.





















