Bison: ``நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? - இது அபத்தமான கேள்வி" - மேடைய...
`முதல்வருக்கு களங்கம் ஏற்படக்கூடாதுனு அமைதியா.!' - துரைமுருகன் பேச்சால் செல்வப்பெருந்தகை காட்டம்
வடகிழக்கு பருவமழையால் கடந்த 10 நாள்களாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இதனால் அணைகள், ஏரி போன்ற நீர்நிலைகள் நிரம்பிவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் ஆங்காங்கே திறந்துவிடப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் அக்டோபர் 22-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
ஒரு அயோக்கியப் பையன்...
அன்றே, செம்பரம்பாக்கம் ஏரி இருக்கும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான செல்வப்பெருந்தகை, தண்ணீர் திறந்து விடுவது பற்றி தன்னிடம் தெரிவிக்காததைக் குறிப்பிட்டு, ``மக்கள் பிரதிநிதிக்கு ஒரு வார்த்தை சொன்னா கெட்டா போயிடும்.
இந்தத் துறை யார் கட்டுப்பாட்டுல இருக்குனே தெரியல... இவர்களெல்லாம் திறக்கக் கூடாது... தொடக்கூடாது… இந்தத் துறை வெறிப்பிடித்துப்போய் கிடக்கிறது.
ஒரு அயோக்கியப் பையன் இந்தத் துறையில் உட்கார்ந்திருக்கிறான்" என்று காட்டமாகப் பேசியிருந்தார்.

அவனாலதான் இந்தத் தொல்லை
இதுகுறித்து ராணிப்பேட்டையில் நேற்று செய்தியார்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ``செல்வப்பெருந்தகை போன்ற அரசியல் தலைவர் இப்படி சொன்னதற்காக நான் வருத்தப்படுகிறேன்.
உண்மை என்னனு தெரிஞ்சு பேசணும். பருவமழை முடிந்து அடுத்த பருவமழை தொடங்கும்போது மேட்டூர் அணை நிரம்பியிருந்தால்தான் முதல்வர் வந்து திறப்பார்.
இதுமாதிரி சின்ன சின்னதா ஆற்று குறுக்க கட்டியிருக்கிறதலாம் அதுபோல பண்ண மாட்டார்கள். கூப்பிடணும்னா கூப்பிடலாம் அது தப்பில்ல. ஆனா யாரும் கூப்பிட மாட்டாங்க.
அங்க ஒருத்தன் இருக்கான், இங்க ஒருத்தன் இருக்கான் என்கிறார். நான் சொல்றேன், அங்க ஒருத்தன் இருக்கான். அவனாலதான் இந்தத் தொல்லை" என்று கூறியிருந்தார்.
இப்படி பேசலாமா...
இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, ``அவர் பேசுனதுதான் எனக்கு வருத்தமாக இருக்கு. ஒரு பொறுப்புள்ள அமைச்சர், மூத்த அமைச்சர், மாபெரும் இயக்கத்தின் பொதுச் செயலாளர் இப்படி பேசலாமா...
அந்தப் பகுதியின் இந்தியா கூட்டணியின் தலைவரோடு பேசிட்டு வரும்போது அத ஒருத்தர் வீடியோ எடுத்து போட்டார். அதுக்கு நான் பொறுப்பாக முடியாது.
என்னைக் கேட்டுட்டு திறங்கனு சொல்லல, எனக்கு ஏன் தகவல் சொல்லலனுதான் கேக்றேன். இந்த மாதிரி திறக்கப்போறாங்க ஆத்து பக்கம் மக்கள் போக வேணாம்னு எச்சரிக்கை பண்றதுக்காக கேக்றேன்.
கேட்டதே குற்றம்னு அவர் (துரைமுருகன்) குற்றச்சாட்டு சொன்னா அதுக்கென்ன பதில். அப்படி சொல்ல கூடாது. அதிகாரிகளைக் கேட்பதற்கே அவரால் பொறுத்துக்கொள்ள முடியலனா நான் என்ன பண்ண முடியும்.
நான் வரம்பை மீறி பேசியிருந்தா அவர் கேக்கலாம். அன்னைக்கு அதிகாரிக்கு போன் போட்டா 5 மணி நேரமா எடுக்கல, அடுத்தநாளும் போன் எடுக்கல.

எம்.எல்.ஏ, எம்.பி-க்கு சொல்லணும்னு கட்டாயமில்லனு சொல்றாங்க. நாளைக்கு வெள்ளம் வந்துருச்சுனா திறந்துவிட்ட அந்த இன்ஜினியரா மக்கள் கிட்ட போயிட்டு நிக்க போறாரு... நான்தான் போய் நிக்க போறேன்.
திறக்குறதுல வெளிப்படைலாம் இல்லனு சொல்ற அதிகாரிகளை மக்கள் பிரதிநிதி கேட்ககூடாதுனு சொல்றது எந்த விதத்துல நியாயம்?
இதுக்கு என்னென்னமோ சாயம் பூசுறீங்களே தப்பில்லயா. எங்களுக்கு இருக்குற சுயமரியாதையே கோமணம்தான் அதுகூட விட்றணுமா? என்ன அர்த்தத்துல அதிகாரிகள் கேக்கறாங்க. நான் என்ன தவறா கேட்டேன்.
முதல்வருக்கும் களங்கம் ஏற்படக்கூடாதுனுதான் அமைதியா இருக்கோம்!
நான் ஒரு எம்.எல்.ஏ பொறுத்துட்டு போயிட்றேன். வேற யாராவது பொறுத்துட்டு போவாங்களா... இது கட்டாயமில்லனா கீழடி வரலாற்றைப் பற்றி நீங்க பேச முடியுமா.. அகழ்வாராய்ச்சி பற்றி பேச முடியுமா... நீர் மேலாண்மை கீழடில இருந்து ஆரம்பிக்குது.
மக்கள் பிரதிநிதிகளை விட அதிகாரிகள் மேலானவர்களா... கூப்பிடாதனு யாரோ அதிகாரிகள் மேல இருந்து சொல்றாங்க... அதிகாரிகள் சொல்றத இந்தத் துறை ஏன் கேக்குது. அதை சீர்தூக்கி பாக்கணும்ல. அதான் என் வேதனை.
ஊராட்சி மன்ற தலைவர், சேர்மன், அப்பகுதி தி.மு.க ஒன்றிய செயலாளர், நகராட்சி தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் எல்லோரும் பட்டியலினத்தவர்.
அவங்க எல்லோரும் ஏன் எங்கள கூப்பிடலனு கேக்றாங்க. இதை அதிகாரிகளும் புரிஞ்சிக்க மாட்றாங்க... மூத்த அமைச்சருக்கும் சொல்லாம விட்ருகாங்க. அதிகாரிகள் ஒன்னு ரெண்டு பேர் அப்டியிருக்காங்க.
முதல்வருக்கும் களங்கம் ஏற்படக்கூடாதுனுதான் அமைதியா இருக்கோம். உடனே தி.மு.க ஆட்சி பட்டியலினத்துக்கு எதிரானதுனு திசைதிருப்பாதிங்க. முதல்வர் அதில் கண்ணும் கருத்துமா இருக்காரு.
2015-ல் ஜெயலலிதா முதலமைச்சரான இருக்கும்போது திறந்துவிட்டாங்க சென்னை நிறைஞ்சு போச்சு. அதிமாதிரியான மக்கள் பிரதிநிதிகளைத்தான் விரும்புறாங்களா (அதிகாரிகள்)? ஒரு மூத்த அமைச்சர் இதையும் நகைச்சுவையாக எடுத்துக்கிட்டது வருத்தமளிக்கிறது" என்று கூறினார்.



















