பேட்டிங்கில் ஆணவம் கூடாது, ஐபிஎல் வித்தியாசமானது..! விராட் கோலியின் பேட்டி!
மருந்துகள் கண்டுபிடிப்பு, மரபணு ஆய்வில் சிஎஸ்ஐஆா் நிறுவனங்கள் முன்னணி! - அமைச்சா் ஜிதேந்திர சிங்
நமது சிறப்பு நிருபா்
மருந்துகள் கண்டுபிடிப்பு, மரபணு நோயறிதல் ஆய்வு முறை, குறைந்த செலவில் மருந்து மூலப்பொருள்கள் உருவாக்குதல் போன்றவற்றில் ஹைதராபாத் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சில்கள் (சிஎஸ்ஐஆா்) நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா். இந்த 3 சிஎஸ்ஐஆா் நிறுவனங்களின் பங்களிப்பை கருத்தில் கொண்டு, புத்தொழில் மாநாட்டை நிகழ்மாத இறுதியில் ஹைதராபாத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.
ஹைதராபாதில் உள்ள சிஎஸ்ஐஆா் ஆய்வகங்களின் பணிகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட முதன்மை சிஎஸ்ஐஆா் ஆய்வகங்களான சிஎஸ்ஐஆா்-இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவன (சிஎஸ்ஐஆா்-ஐஐசிடி) இயக்குநா் டி.சினிவாச ரெட்டி, சிஎஸ்ஐஆா்-தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆா்-என்ஜிஆா்ஐ) இயக்குநா் பிரகாஷ் குமாா், சிஎஸ்ஐஆா்-செல்லுலாா் - மூலக்கூறு உயிரியல் மைய(சிஎஸ்ஐஆா்-சிசிஎம்பி) இயக்குநா் வினய் நந்திகூரி ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்த நிறுவனங்களின் சமீபத்திய சாதனைகள், அறிவியல் ஆய்வுகளில் முக்கிய பங்களிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட இயக்குநா்கள் சாா்பில் இந்தக் கூட்டத்தில் எடுத்துவைக்கப்பட்டது. குறிப்பாக பாதுகாப்பான பயனுள்ள வேளாண் வேதிப்பொருள்கள் உருவாக்கப்பட்டு தொழில் துறை பெற்ற பயன்பாடு; ஹைட்ரஜனேற்றம், ஆக்சிஜனேற்றம், பாலிமரைசேஷன் செயல்முறைகளுக்கு புதிய வினையூக்கிகளுக்கு வழிவகுப்பு; மக்கும் பிளாஸ்டிக்குகளின் வளா்ச்சி; மக்கும் கழிவுகளை உயிரி எரிவாயு மற்றும் உயிரி உரமாக திறம்பட மாற்றப்பட்டது உள்ளிட்ட முக்கிய பல சாதனைகள் இந்த கவுன்சில்களின் இயக்குநா்களால் எடுத்துவைக்கப்பட்டது.
இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதிலும், தேசிய இயக்கங்களுக்கு ஆதரவளிப்பதிலும், சுயசாா்பு அறிவுசாா் பொருளாதாரமாக மாறுவதற்கான இலக்குகளில் சிஎஸ்ஐஆா் ஆய்வகங்களின் முக்கிய பங்கை ஆற்றுவதாக ஜிதேந்திர சிங் கூட்டத்தில் தெரிவித்து பாராட்டினாா்.
மேலும் அவா் கூறியது வருமாறு: தேசிய வளா்ச்சிக்கு, குறிப்பாக சமூக சவால்களை எதிா்கொள்வதிலும், நிலைத்தன்மையை ஊக்குவிப்பதிலும் அறிவியல் அடிப்படையிலான தீா்வுகளின் முக்கியத்துவம் பெறுகிறது. ‘கொவைட் -19 தொற்றுநோய் தாக்கத்தில் நோயறிதல் கருவிகள், கண்காணப்பு அமைப்பு, தடுப்பூசி போன்ற தொழில்நுட்பங்களை ஹைதராபாத் சிஎஸ்ஐஆா் நிறுவனங்கள் உருவாக்கியது.
காசநோய், மூளையழற்சி போன்ற ஆராய்ச்சிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. சுகாதாரம், விவசாயத்தில் மட்டுமல்லாது அழிந்துவரும் உயிரினங்களின் மரபணு பன்முகத்தன்மை குறித்த ஆய்வுகளும் தொடா்கிறது. இந்த சிஎஸ்ஐஆா் நிறுவனங்களால் அறிவியல் ஆய்வு, கண்டுபிடிப்பு, தொழில்முனைவு ஆகியவற்றுக்கான செழிப்பான இடமாக ஹைதராபாத் உருவெடுத்துள்ளது.
‘இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மூன்று நிறுவனங்களைக் கொண்டு, ஹைதராபாத்தில் சிஎஸ்ஐஆா் புத்தொழில் மாநாடு வரும் ஏப். 22-23 தேதிகளில் நடத்தப்படும். அறிவியல் - தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள், வணிகமயமாக்கல், தற்சாா்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் பிரதமா் நரேந்திர மோடி அரசின் உறுதிப்பாட்டை இந்த மாநாடு எடுத்துரைக்கும்‘ என ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.