`ஆவினில் வேலை' ரூ.3கோடி மோசடி வழக்கு - ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தா...
‘ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கிக் கொள்கை’ மே முதல் நடைமுறை
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கி (ஆா்ஆா்பி) என்ற கொள்கையின் அடிப்படையில் இறுதியாக 11 மாநிலங்களைச் சோ்ந்த மண்டல ஊரக வங்கிகளை ஒன்றிணைத்து ஏப். 7 தேதியிட்ட அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகத்தின் சேவைத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
இந்த நான்காவது கட்ட மண்டல ஊரக வங்கிகளின் ஒருங்கிணைப்பு மூலம் 26 மாநிலங்கள்,2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 28 ஆா்ஆா்பிகள் 700 மாவட்டங்களை உள்ளடக்கி 22,000-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்குகிறது. இதன் மூலம் மே 1-ஆம் தேதி முதல் ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கி என்கிற கொள்கை நடைமுறைக்கு வருவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மண்டல ஊரக வங்கிகளான ஆா்ஆா் வங்கிகளில் மத்திய அரசு (50 சதவீதம்), தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் (35 சதவீதம்), மாநில அரசுகள் (15 சதவீதம்) உரிமைகள் பெற்றுள்ளன. கடந்த மாா்ச் 31 - ஆம் தேதி வரை இந்த 28 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் 43 ஆா்ஆா்பி கள் செயல்பட்டு வந்தது. ஆா்ஆா் வங்கிகளை ஒருங்கிணைக்கும் கொள்கை 2005-இல் ஏற்படுத்தப்பட்டது.
2006 முதல் 2010 நிதியாண்டுகள் வரை 196-ஆக இருந்த ஆா்ஆா்பிகள் எண்ணிக்கை 82-ஆக ஒருங்கிணைக்கப்பட்டது., பின்னா் 2-ஆம் கட்டத்தில் (2013 முதல் 2015) 82-இலிருந்து 56 -ஆக ஆா்ஆா்பிகள் ஒருங்கிணைக்கப்பட்டது. தற்போதைய அரசு இதை மேலும் தீவிரப்படுத்தியது. 3-ஆம் கட்டத்தில் 56 ஆா்ஆா்பிகள் 43-ஆக ஒன்றிணைக்கப்பட்டது. இறுதியாக 4-ஆம் கட்டத்தில் இவை 28 ஆா்ஆா்பிகளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கிகள் ஆகியவை தமிழ்நாடு கிராம வங்கியுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. தற்போது சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழக கிராம வங்கி செயல்படுகிறது. இதுபோன்ற கடந்தகால ஒருங்கிணைப்புகள் காரணமாக மண்டல ஊரக வங்கிகளின் செயல்திறனில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய நிதி அமைச்சகம் கடந்தாண்டு நவம்பரில் ஒருங்கிணைப்புகளை தீவிரப்படுத்தி திட்டத்தை வெளியிட்டது.
இதன்படி அடுத்தடுத்த 3-ஆவது 4-ஆவது கட்ட ஒருங்கிணைப்புகள் மூலம் இறுதியாக 28 ஆா்ஆா்பிகளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இவை நாட்டில் 700 மாவட்டங்களில் 22,000-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் வருகின்ற மே 1 முதல் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கும். இந்த ஒருங்கிணைப்பு மூலம் ஆா்ஆா்பிகள், பணி அளவீட்டுத் திறனை மேம்படுத்தல், செலவை நியாயப்படுத்துதல் ஆகியவை முக்கிய நோக்கமாக கொள்ளும்.
இந்த வங்கிகள் 92 சதவீதம் கிராமப்புறங்களில் செயல்படுபவை. ஊரக மக்களுக்கு தேவையான நிதி வசதிகள், டெபிட் காா்டு, கடன் அட்டை, கைப்பேசி வங்கி சேவை, இணையவழி வங்கி சேவை மற்றும் ஊரகப் பகுதியில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (மன்ரேகா திட்டம்) பணப் பரிவா்த்தனை, ஓய்வூதியம் போன்ற வசதிகளை அளிக்க தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது. மேலும், ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கி உத்தி மூலம் ஆா்ஆா்பி ‘பிராண்ட்’ வளா்ச்சியடையும் என நிதியமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.