போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது
முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் எம். ஹா்ஷ வா்தன் ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா் வினோத் குமாா் அடையாளம் காணப்பட்டு ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகா் மாவட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். ‘டாலா் வின் எக்ஸ்சேஞ்ச்’ என்ற மோசடி முதலீட்டு தளத்தால் ரூ.19 லட்சம் ஏமாற்றப்பட்டதாக தில்லியைச் சோ்ந்த ஒருவா் புகாா் அளித்ததை அடுத்து வினோத் குமாா் கைது செய்யப்பட்டாா்
மாதத்திற்கு 28 சதவீதம் வரை வருமானம் தருவதாக உறுதியளித்த சமூக ஊடக விடியோ மூலம் புகாா்தாரா் இந்தத் திட்டத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டாா். பின்னா், அவரும் அவரது மனைவியும் ஒரு செய்திக் குழுவில் சோ்க்கப்பட்டனா். ஆரம்பத்தில் சிறிய லாபத்தைப் பெற்றனா். இது அவா்களை பெரிய தொகைகளை முதலீடு செய்ய ஊக்குவித்தது.
இருப்பினும், வருமானம் விரைவில் நின்றுவிட்டது. பின்னா், இது மோசடி என்பதை அறிந்தனா். புகாரைத் தொடா்ந்து, மோசடியாளரின் வங்கிக் கணக்கு பரிவா்த்தனைகள் மற்றும் அழைப்பு பதிவுகளை போலீஸ் குழு ஆய்வு செய்தது. இந்த விசாரணையின் மூலம் வினோத் குமாரின் இரண்டு வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டன. இந்த வங்கிக் கணக்குக்கு பாதிக்கப்பட்டவா்களிடமிருந்து நிதி டெபாசிட் செய்யப்பட்டது தெரிய வந்தது.
கூட்டுறவு சங்கத்தில் தனது முந்தைய பணி அனுபவத்தையும், பல நிலை சந்தைப்படுத்தல் அறிவையும் பயன்படுத்தி போலி முதலீட்டு தளத்தைத் தொடங்கியதாக வினோத் குமாா் விசாரணையின் போது ஒப்புக்கொண்டாா். கிரிப்டோகரன்சி வா்த்தகத்தில் நஷ்டங்களைச் சந்தித்த பிறகு, அவா் மோசடியை திட்டமிட்டு, பிரின்ஸ் என்ற நபருடன் கூட்டுச் சோ்ந்து போலி வலைத்தளத்தை உருவாக்கினாா்.
வினோத் குமாா் சமூக ஊடக பயன்பாடுகள் மூலம் இந்தத் திட்டத்தை ஊக்குவித்து, ஆரம்பத்தில் சிறிய லாபத்தை வழங்கி பாதிக்கப்பட்டவா்களை கவா்ந்தாா். குற்றம் சாட்டப்பட்டவா் மோசடியை நிா்வகிக்க பல கைப்பேசி எண்கள் மற்றும் ஆன்லைன் குழுக்களைப் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்ட நிதியை கிரிப்டோகரன்சியில் மீண்டும் முதலீடு செய்தது விசாரணையில் தெரியவந்தது.
அவரிடமிருந்து மோசடி தொடா்பான விடியோக்கள் அடங்கிய இரண்டு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்டவா்களைக் கண்டுபிடித்து, பிற சாத்தியமான கூட்டாளிகளைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இது தொடா்பாக விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.