செருப்பால் அடித்த டெக்னீஷியன்; வெளுத்து வாங்கிய தூய்மை பணியாளர்கள்! - மருத்துவமனையில் நடந்தது என்ன?
அருப்புக்கோட்டையில் துப்புரவு பணியாளரை மருத்துவமனை ஊழியர் செருப்பால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே டெக்னீசியனாக பணிபுரிந்து வருபவர் ராஜ். எக்ஸ்ரே அறையை சுழற்சி முறையில் தினமும் ஒரு தூய்மை பணியாளர் சுத்தம் செய்வது வழக்கம். அதன்படி இன்று, எக்ஸ்ரே அறையை உமா மகேஸ்வரி எனும் துப்புரவு பணியாளர் சுத்தம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது லேப் டெக்னீசியன் ராஜுக்கும், துப்புரவு பணியாளர் உமா மகேஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜ், தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி, உமா மகேஸ்வரியை கையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வலி தாங்க முடியாமல் உமா மகேஸ்வரி அழுதுள்ளார்.
இந்த சத்தம்கேட்டு வந்த சக துப்புரவு பணியாளர்கள் லேப் டெக்னீசியன் ராஜுக்கு எதிராக மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த மருத்துவ அலுவலர்கள், ராஜை அழைத்து விசாரணை நடத்தியதோடு அவரின் நடத்தையை கண்டித்தனர். மேலும், நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து ராஜ் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் மருத்துவ அலுவலர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், திடீர் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதில் துப்புரவு பணியாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து லேப் டெக்னீசியன் ராஜை சரமாரியாக தாக்கினர்.
இதையடுத்து, இருதரப்பினரையும் சமாதானப்படுத்திய மருத்துவ அலுவலர்கள், ராஜை மீட்டு முதலுதவிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என கூறினர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
