`செயற்கை சுவாசம் பொருத்திய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை' - மருத்துவமனை ஊழியர்கள் மீது வழக்கு
டெல்லி அருகில் உள்ள குருகிராமில் நடந்த பயிற்சியில் பங்கேற்பதற்காக 46 வயது விமானப்பணிப்பெண் வந்திருந்தார். வந்த இடத்தில் அவர் ஹோட்டலில் தங்கி இருந்த போது நீச்சல் குளத்தில் விழுந்துவிட்டார். இதையடுத்து அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவரது கணவர் அவரை வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அவர் கடந்த 13ம் தேதி சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு தனது கணவரிடம் அப்பெண் மருத்துவமனை ஊழியர்கள் மீது அதிர்ச்சியான புகாரை தெரிவித்துள்ளார். விமான பணிப்பெண் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அதுவும் செயற்கை சுவாசம் பெற்றுக்கொண்டிருந்த போது மருத்துவமனை ஊழியர்கள் சிலர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இச்சம்பவத்தின் போது நோயாளிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அருகில் இரண்டு செவிலியர்களும் நின்றுள்ளனர். சம்பந்தப்பட்ட நோயாளி அரை மயக்கத்தில் இருந்தார். இதனால் அவரால் எதுவும் பேசமுடியவில்லை. தற்போது இது குறித்து அப்பெண் தனது கணவரிடம் தெரிவித்து அதன் மூலம் போலீஸில் புகார் செய்துள்ளார்.
போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து குருகிராம் போலீஸ் செய்தித்தொடர்பாளர் சந்தீப் கூறுகையில், ''பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனைக்கு சென்று சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்தவர்கள் பட்டியலை ஆய்வு செய்துள்ளோம். அதோடு கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவரிடம் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தற்போது குற்றவாளியை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது''என்று தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. மருத்துவனைக்குள் நடந்துள்ள இச்சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
