அகிலேஷ் யாதவுக்கு மீண்டும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பு கோரி அமித் ஷாவுக்கு கடிதம்!
சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மீண்டும் தேசிய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சமாஜவாதி கட்சி கடிதம் எழுதியுள்ளது.
கடிதத்தில், "முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்புடன் வழங்கப்பட்டு வந்த தேசிய பாதுகாப்புப் படை(என்எஸ்ஜி)யினரின் பாதுகாப்பு திருப்பி பெறப்பட்டது.
தற்போது அகிலேஷ் யாதவின் பாதுகாப்பு கருதி தேசிய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட வேண்டும். அகிலேஷ் யாதவ் இந்த நாட்டின் 3-வது பெரிய கட்சியின் தலைவராக இருக்கிறார். பல்வேறு நாடுகளுக்குச் செல்கிறார்.
ஊடகங்களின் மூலமாக அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பாஜக மூத்த தலைவரும் அகிலேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உத்தரப் பிரதேச அரசு, இந்த கொலை மிரட்டல் விடுத்த நபர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் எங்கள் கட்சித் தலைவரின் பாதுகாப்பு கருதி அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்புடன் தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பையும் வழங்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | உங்கள் டீன்-ஏஜ் குழந்தைகள் தனிமையை விரும்புகிறார்களா? பதின்வயதினரின் பிரச்னைகள்!!