``மும்பை தாக்குதலுக்கு இப்படித்தான் நாள் குறித்தோம்..'' - விசாரணையில் தஹாவூர் ராணா பகீர்
பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி தஹாவூர் ராணா
மும்பையில் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி தஹாவூர் ராணா என்பவன் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டான்.

மோடி - ட்ரம்ப் சந்திப்பு:
அவனை இந்தியாவிற்கு நாடு கடத்தவேண்டும் என்று இந்தியா தொடர்ந்து அமெரிக்காவிடம் நிர்ப்பந்தம் செய்து வந்தது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்து இதுகுறித்து பேசினார். அப்போது, ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்த ட்ரம்ப் ஒப்புக்கொண்டார்.
ஆனால், ராணா தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்த தடை விதிக்கவேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்தார். அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த வாரம் சிறப்பு விமானத்தில் ராணா இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டான்.
NIA தீவிர விசாரணை:
அவனை டெல்லியில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. ராணாவிடம் மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள பங்கு, ராணாவின் கூட்டாளி டேவிட் ஹெட்லிக்கு உள்ள தொடர்பு உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கிறது. அதன் படி மும்பை தாக்குதலுக்கு திட்டமிட்ட லஷ்கர் இ தொய்பா, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் டேவிட் ஹட்லி ஆகியோர் தாக்குதல் நடத்துவதற்கு குறிப்பிட்ட நாளை முடிவு செய்து வைத்திருந்தனர். அந்த நாளில் கடலின் சீற்றம் அதிகமாக இருந்தது என்றும், எனவே தாக்குதல் திட்டத்தை செயல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்ததாக ராணா குறிப்பிட்டுள்ளான்.
டேவிட் ஹெட்லிதான் ராணாவை தொடர்பு கொண்டு கடல் சீற்றம் சரியாகும் வரை தற்காலிகமாக தாக்குதல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளான்.
தஹாவூர் ராணா - டேவிட் ஹட்லி சதித்திட்டம்:
மும்பை தாக்குதல் குறித்து தனக்கு முழுமையாக தெரியும் என்றும், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத தலைவர்களுக்கு எந்த அளவுக்கு தாக்குதல் குறித்த தகவல் தெரியுமோ அந்த அளவுக்கு தாக்குதல் தொடர்பான தகவல் தனக்கு தெரிந்திருந்தது என்று ராணா விசாரணையில் தெரிவித்துள்ளான். அவன் கூறிய தகவலை அமெரிக்க விசாரணை அமைப்பும் உறுதிபடுத்தியது.
மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் டேவிட் ஹட்லி இந்தியாவிற்கு வந்து பார்த்துவிட்டு 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கா சென்று 6 வாரம் தங்கியுள்ளான். மே மாதம் ராணாவை டேவிட் ஹட்லி சந்தித்து மும்பை தாக்குதல் குறித்து ஆலோசனை செய்துள்ளான்.
அப்போது தாக்குதல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக ராணாவிடம் டேவிட் ஹட்லி தெரிவித்துள்ளான். மேலும் மும்பையில் உள்ள தாஜ்மகால் பேலஸ் ஹோட்டலையும் தாக்க லஷ்கர் இ தொய்பா விரும்புவதாக ராணாவிடம் டேவிட் தெரிவித்துள்ளான்.

பலத்த பாதுகாப்புடன் விசாரணை
அனைத்து தகவல்களையும் ராணாவிடம் டேவிட் ஹட்லி தெரிவித்தபோதும், அமெரிக்க அதிகாரிகளிடம் தனக்கு மும்பை தாக்குதல் குறித்து எதுவும் தெரியாது என்று ராணா தெரிவித்துள்ளான்.
இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் தங்களுக்கு தெரிந்த ஒவ்வொரு தகவல் குறித்தும் ராணாவிடம் விசாரித்து வருகின்றனர். தினமும் ராணாவிடம் அதிகாரிகள் 10 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணா தற்போது அடைக்கப்பட்டு இருக்கும் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரானா தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது என்பதால் அவனை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்கின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
