மலேசியா எரிவாயு குழாய் வெடி விபத்து: 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
மலேசியா நாட்டில் எரிவாயு குழாய் வெடி விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் மிகப் பெரிய நகரமான கோலாலம்பூரின் புத்ரா பகுதியில் இன்று (ஏப் 1) காலை 8.10 மணியளவில் அந்நாட்டின் தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸிற்கு சொந்தமான எரியாவு குழாயில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஏற்பட்ட தீப்பிழம்பானது சுமார் 20 அடுக்குமாடி கட்டடம் உயரத்திற்கு எரிந்துள்ளது. இதுகுறித்து வெளியான விடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், மலேசியாவின் பேரிடர் மீட்புப் படையினர் அங்கு வரவழைக்கப்பட்டு விபத்து ஏற்பட்ட குழாயை முடக்கி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், மதியம் 2.45 மணியளவில் அந்தத் தீயானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அந்நாட்டில் தற்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பயங்கர சத்தத்துடன் வெடித்த இந்த விபத்தினால் அப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டு குடியிருப்புகள் பெரும்பாலும் சேதமடைந்ததுடன், 49 வீடுகள் தீயிக்கு இரையாகியுள்ளன.
இத்துடன், இந்த விபத்தில் சுமார் 112 பேர் காயமடைந்துள்ள நிலையில் அதில் 63 பேர் தீக்காயம் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செலன்கார் மாநில முதல்வர் அமிருதீன் ஷாரி கூறுகையில், பாதுகாப்பு கருதி அப்பகுதி வாசிகள் அனைவரும் தீயணைப்புப் படையினரால் வெளியேற்றப்பட்டு அங்குள்ள மசூதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் நிலைமை முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் வரை அவர்கள் அங்கேயேதான் இருப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பெட்ரோனாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விபத்தில் பாதிக்கப்படாத 3 எரிவாயு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?