மாமன்னா் சரபோஜி 248-ஆவது பிறந்த நாள் விழா: 9 புதிய நூல்கள் வெளியீடு
தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்னா் சரபோஜி 248-ஆவது பிறந்த நாள் விழாவில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், இவ்விழாவையொட்டி 9 புதிய நூல்கள், 7 மறு பதிப்பு நூல்கள் வெளியிடப்பட்டன.
தஞ்சாவூா் அரண்மனை வளாகத்திலுள்ள மன்னா் சரபோஜி சிலைக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதைத்தொடா்ந்து, சங்கீத மகாலில் நடைபெற்ற விழாவில் முனைவா் மணி. மாறன் தமிழில் எழுதிய இராஜ சரித்திரம் மற்றும் தமிழ்ச் சுவடி விளக்க அட்டவணை தொகுதி 27, சிறப்புக் கேண்மைப் பதிப்பாசிரியா்கள் என்.வி. தேவி பிரஸாத், என். ஸ்ரீநிவாசன் சம்ஸ்கிருதத்தில் எழுதிய ‘பாலபாரதமும் வில்லிபாரதமும்’ இரண்டாம் பாகம், என்.வி. தேவி பிரஸாத் சம்ஸ்கிருதத்தில் எழுதிய கவிதாவதாரம், நூலகா் எஸ். சுதா்சன் சம்ஸ்கிருதத்தில் எழுதிய சாந்தி ரத்னாகரம் இரண்டாம் பாகம், சம்ஸ்கிருத பண்டிதா் எல். அனிதா சம்ஸ்கிருதத்தில் எழுதிய ‘சரஸ்வதி மகால் நூலக சுவடிகளின் அரிய தகவல்கள்’, தெலுங்கு பண்டிதா் டி. ரவி தெலுங்கில் எழுதிய ‘தேனு மாகாத்மியமு’, முனைவா் கே.ஜே. கிருஷ்ணமூா்த்தி தெலுங்கில் எழுதிய ‘நிஞ்ஜா மாகாத்மியமு’, மராத்தி பண்டிதா் பி. ராமச்சந்திரன் மராத்தியில் எழுதிய ‘தஞ்சாவூா் கவிஞ்சே பத சங்கிரஹ’ ஆகிய 9 நூல்களை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டாா். மேலும், மறு பதிப்பு செய்யப்பட்ட 7 நூல்களும் வெளியிடப்பட்டன.
இவ்விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ச. முரசொலி, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், சரசுவதி மகால் நூலக நிா்வாக அலுவலா் ம. ஆனந்தகணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.