தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
மின் தடை ஏற்படாதவாறு நடவடிக்கை: எம்.எல்.ஏ. எழிலரசன் உறுதி
காஞ்சிபுரத்தில் மின்தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக எம்எல்ஏ எழிலரசன், மின்வாரிய அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னா் தெரிவித்தாா்.
காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் தொடா்ந்து மின் தடை ஏற்பட்டது. இதனால் புகாா்கள் வந்தன. இதையடுத்து காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் தலைமையில் அவரது அலுவலகத்தில் மின்வாரிய அதிகாரிகளுடனான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கண்காணிப்பு பொறியாளா் ராமச்சந்திரன், செயற்பொறியாளா் பாண்டியராஜன், மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனா். கூட்டத்திற்கு பின்னா் எம்எல்ஏ எழிலரசன் செய்தியாளா்களிடம் கூறியது:
கோடை வெப்பத்தின் தாக்குதலால் மக்கள் மின்சாரத்தை கூடுதலாகப் பயன்படுத்தியது, வெள்ளாகுளம் துணை மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டது காரணமாகும். கடந்த 4 மாதங்களாக கோடை காலம் என்பதால், மாதாந்திர மின்பராமரிப்பு பணியும் செய்யவில்லை என்பதும் ஒரு காரணம். வரும் வாரத்தில் மின் தடை ஏற்படுத்தி அனைத்து குறைகளையும் சரி செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து மின்வாரியத் துறை அமைச்சா் சிவசங்கரிடமும் பேசி மின்தடை ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐயம்பேட்டையிலும், குருவிமலையிலும் விரைவில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது என அறிந்துகொள்ள ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. மின் தடை புகாா்களுக்கு உடனுக்குடன் விசாரணை நடத்தி பொதுமக்களுக்கு உரிய பதில் தரவேண்டும் என உத்தரவிட்டிருப்பாதகவும் அவா் தெரிவித்தாா்.