செய்திகள் :

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?

post image

முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் நோக்கம், திட்டத்தின் விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை, தகுதி என அனைத்து விவரங்களையும் அறியலாம்.

பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்யவும், இரண்டாவதும் பெண் குழந்தையா? என்று பெற்றோர் கவலைப்படக் கூடாது என்பதற்காகவும், மூன்றாவதாக ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து குடும்பக் கட்டுப்பாட்டை தள்ளிப்போடுவதை நிறுத்தும் வகையிலும் கொண்டு வரப்பட்டதே முதலமைச்சரின் பெண் குழந்தைகள் திட்டம்.

ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து, குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு பெண் குழந்தைகளின் பெயரிலும் தலா ரூ.25 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்தப்படுகிறது. இது அவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் 18 வயதில் முதிர்வடையும்.

நோக்கம்

பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், அந்தந்த மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும்,

பெண் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கை மற்றும் தக்கவைத்தலை ஊக்குவித்தல் மற்றும் குறைந்தபட்சம் இடைநிலை வரையிலான கல்வியை உறுதி செய்தல்.

பெண் குழந்தைகளை 18 வயதுக்குப் பிறகே திருமணம் செய்ய ஊக்குவித்தல்.

இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு நெறிமுறையைப் பின்பற்ற பெற்றோர்களை ஊக்குவித்தல்.

பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமூக மற்றும் நிதி அதிகாரம் அளித்தல்.

பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்துவதில் குடும்பத்தின் பங்கை வலுப்படுத்துதல்

திட்ட விவரம்

1992 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் தற்போது ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்விக்கான உரிமை அளிக்கப்பட்டு, ஏழை குடும்பத்திற்கு சில சரிபார்க்கத்தக்க நிபந்தனைகளுடன் ஊக்கத் தொகையுடன் கூடிய வைப்புத் தொகை 18 வயது முடிவில் அளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விண்ணப்பிக்கும் முறை

தற்போது பொது சேவை மையத்தில் பெற்றோர் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் சான்றுகள், மாவட்ட சமூகநல அலுவலரால் சரிபார்க்கப்பட்டு, சரியான விண்ணப்பங்கள் பட்டியலிடப்பட்டு, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

திட்டம் ஒன்று

இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது பிறகோ பிறந்து, குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை மட்டும் இருப்பின் அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையான ரூ.50,000/- தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும். அந்நிறுவனத்தின் மூலம் இரசீது பெண் குழந்தையின் பெயரில் வழங்கப்படுகிறது.

அதுவே ஒரு பெண் குழந்தை 01.08.2011 க்கு முன்பு பிறந்த குழந்தை எனில் ரூ.25,000ம் முதலீடு செய்யப்படும்.

திட்டம் இரண்டு

இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்து, குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தையின்பேரிலும் நிலையான வைப்புத் தொகையாக தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும். அந்நிறுவனத்தின் மூலம் இரசீது நகல், பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படும்.

01.08.2011 க்குமுன்பு பிறந்த குழந்தைகள் எனில் தலா ரூ. 15,000/-ம் வரவு வைக்கப்படும்.

திட்டம் மூன்று

இத்திட்டத்தின் கீழ் முதல் பிரசவத்தில் 1 பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் 2 பெண் குழந்தைகளும் பிறந்தால், தலா 1 குழந்தைக்கு ரூ. 25,000/- வீதம் தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது நகல், பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படும்.

மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடன்,கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.

தகுதிகள்

பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் அரசாங்க மருத்துவமனையில் கருத்தடை செய்ததற்கான சான்று அளிக்க வேண்டும்.

பெண் குழந்தை மட்டுமே இருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்கக் கூடாது.

ஆண்டு வருமான வரம்பு ரூ.1,20,000/-க்குள் இருக்க வேண்டும்.

இரண்டாவது குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கும்போது சில முக்கிய சான்றிதழ்களைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

1. ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ்

2. குடும்ப புகைப்படம்

3. திருமணச் சான்றிதழ்

4. இருப்பிட சான்றிதழ்

5. கருத்தடை செய்துகொண்டதற்கான சான்றிதழ்

6. சாதிச் சான்றிதழ்

7. குடும்ப அட்டை

8. பெற்றோரின் ஆதார் அட்டை

9. பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்

10. குடும்ப வருமான சான்றிதழ்.

மேற்கண்ட சான்றிதழ்கள் சிலவற்றின் அசல் சான்றிதழும், சில சான்றிதழ்களின் அசலை பெற்றோர் வைத்துக்கொண்டு நகலையும் இணைக்க வேண்டும்.

பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்றவற்றை மாநகராட்சி அலுவலகத்திலும், கருத்தடை செய்துகொண்டதற்கான சான்றிதழ் மருத்துவமனையிலும் பெற வேண்டும்.

சாதி சான்றிதழ் வருவாய்த் துறை அலுவலகத்திலும், திருமணச் சான்றிதழை துணை பதிவாளர் அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க

அனைத்துச் சான்றிதழ்களுடன் பொது சேவை மையத்துக்குச் சென்று பயோ மெட்ரிக் தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அவர்கள் அளிக்கும் விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, சான்றிதழ்கள் அனைத்தையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதற்கான அத்தாட்சி ரசீது வழங்கப்படும். அதனை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதில் தனித்துவ அடையாள எண் இடம்பெற்றிருக்கும்.

நேரில் விண்ணப்பிக்க

வட்டார வளர்ச்சி அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் குழந்தையின் தாய்தான் நேரில் சென்று விண்ணப்பத்தைக் கொடுக்க வேண்டும்.

கேட்டிருக்கும் சான்றிதழ்கள் சரியாக இருக்கிறதா என்பதை, அசல் சான்றிதழ்களுடன் அதிகாரிகள் சரிபார்த்து விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வார்கள். அப்போது விண்ணப்பித்தற்கான உறுதி செய்யும் ரசீது வழங்கப்படும். இதில், விண்ணப்பித்த நாள் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். இவை இருந்தால்தான் வைப்புத் தொகை சான்றிதழ் பெற முடியும்.

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறித்து 2 மாத காலம் அல்லது அதிகாரிகள் சொல்லும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் உறுதி செய்த ரசீதுடன் நேரில் சென்று பெற்றோர் உறுதி செய்துகொண்டு, வைப்புத் தொகைக்கான நகல் ஆவணம் வழங்கப்படும்.

முன்பு, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெற்றோர் நேரில் சென்று, புதுப்பிக்கும் வசதி இருந்தது. கரோனா காலத்துக்குப் பிறகு, தானாகவே, கணக்குப் புதுப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதிர்வுத் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பித்த பெண் குழந்தைகளில் ஒருவருக்கு 18 வயது பூர்த்தியானதும், முதிர்வுத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்தப் பெண்ணின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் சான்றிதழ், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல், மகள் மற்றும் தாயின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பெண் குழந்தைகள் திட்டத்துக்கு விண்ணப்பித்து வைப்பு வைக்கப்பட்டதற்கான ஆவணம் என அனைத்தையும் இணைத்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

முதிர்வுத் தொகை, விண்ணப்பித்த ஆண்டு, குழந்தைகள் பிறந்த ஆண்டுக்கு ஏற்ப மாறுபடும். இதற்கு விண்ணப்பித்ததும், குறிப்பிட்ட மாத காலத்துக்குள், பெண்ணின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

முழு ரயில், ரயிலின் ஒரு பெட்டியை முன்பதிவு செய்வது எப்படி?

முழு ரயில் அல்லது ரயிலின் ஒரு பெட்டியை ஒப்பந்த முறையில் முன்பதிவு செய்வது எப்படி, கட்டணம் எவ்வளவு என்பதை விரிவாகப் பார்க்கலாம்.பிற போக்குவரத்தைக் காட்டிலும் ரயில் பயணத்தை பெரும்பாலானோர் விரும்புவதற்கா... மேலும் பார்க்க

நெட் பேங்கிங் விண்ணப்பிப்பது எப்படி?

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர், இணையம் மூலம் தங்கள் கணக்கைக் அணுகி பல்வேறு பரிவர்த்தனைகளைச் செய்யக்கூடிய ஒரு வசதியே நெட் பேங்கிங் (இணையவழி வங்கிச் சேவை) ஆகும். இது இன்டர்நெட் பேங்கிங் அல்லது ஆன்லைன் பே... மேலும் பார்க்க

செல்வமகள் சேமிப்பு திட்டம் - முழு விபரம்!

ஆண் குழந்தைப் பிறந்தால் வரவாகவும், பெண் குழந்தைகள் செலவாகவும் நினைத்த காலம் மாறி, பெண் குழந்தைகளை அனைவரும் வரவேற்பதுடன் அரசும் பெண் குழந்தைகளுக்கு பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகின... மேலும் பார்க்க

ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டை பெறுவதற்கான எளிய வழி! இதோ...!

மக்களுக்கு மருத்துவக் காப்பீடு என்பது மிகவும் இன்றியாமையாதது. அதனால்தான் மாநில அரசும் மத்திய அரசும் பலவிதமான மருத்துவ சிகிச்சைகளையும் காப்பீடுத் திட்டங்களையும் இலவசமாக வழங்கி வருகிறது.70 வயதுக்கு மேற்... மேலும் பார்க்க

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்புவது எப்படி?

மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்களை, துறைவாரியான நடவடிக்கைகள் என நாட்டின் குடிமக்கள் அறிந்துகொள்ள உரிமை பெற்ற தகவல்களை யார் வேண்டுமானாலும் கேட்டு அறிந்துகொள்ள வழி வகை செய்வதே தகவல் அறியும் உரிமைச் சட்ட... மேலும் பார்க்க