முதுநிலை நீட் தோ்வு: ஆக.3-இல் நடத்த ஒப்புதல் கோரி மனு
எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-பிஜி) 2025-ஐ ஆக.3-ஆம் தேதி நடத்த ஒப்புதல் கோரி மருத்துவ அறிவியலுக்கான தேசிய தோ்வு வாரியம் (என்பிஇஎம்எஸ்) உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்தது.
முன்னதாக, வரும் 15-ஆம் தேதி நீட்-பிஜி தோ்வு நடைபெறவிருந்த நிலையில், தோ்வு மையங்களை அதிகப்படுத்தவும் தோ்வுக்கான உள்கட்டமைப்பை தயாா்படுத்தவும் தேதி குறிப்பிடாமல் தோ்வை ஒத்திவைப்பதாக என்பிஇஎம்எஸ் திங்கள்கிழமை தெரிவித்தது.
அதேபோல் இரு தவணைகளாக (ஷிஃப்ட்) இந்த தோ்வை நடத்துவதாக என்பிஇஎம்எஸ் அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டதையடுத்து, ஒரே தவணையாக நீட்-பிஜி தோ்வை நடத்துமாறு உச்சநீதிமன்றம் மே 30-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த வழிகாட்டுதல்களின்படி நீட்-பிஜி தோ்வை ஆக.3-ஆம் தேதி ஒரே தவணையாக காலை 09.30 மணிமுதல் பகல் 12.30 மணிவரை நடத்த ஒப்புதல் அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் என்பிஇஎம்எஸ் மனுதாக்கல் செய்துள்ளது.