மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம்: உதயநிதி ஸ்டாலின்
மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய உதயநிதி ஸ்டாலின்,
"தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்காக பலர் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத்தான் தமிழ்நாடு எப்போதும் உள்ளது.
தமிழ்நாட்டில் ஒருநாளும் மும்மொழிக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாது.
மத்திய அரசு தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய கல்வித் தொகையைதான் கேட்டிருக்கிறோம். அதற்கு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும், மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.
தமிழர்களின் உரிமையைத்தான் கேட்கிறோம். கல்வி என்பது உரிமை. இந்த விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள்?" என்று கூறினார்.
முன்னதாக, தமிழக பள்ளி மாணவர்களுக்கான கல்வி நிதியைத் தர மத்திய அரசு மறுக்கிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, 'தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை' என பிரயாக்ராஜில் செய்தியாளர்களுடன் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் இந்த பதிலுக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தமிழகத்திற்கு மும்மொழிக்கொள்கை தேவையில்லை, இருமொழிக் கொள்கையே போதும் என அரசியல் கட்சியினர் திட்டவட்டமாகக் கூறி வருகின்றனர்.
இதனிடையே, தமிழகத்திற்கான ரூ. 2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இதையும் படிக்க | 'கல்வியை அரசியலாக்க வேண்டாம்' - முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!
இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
'மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம். தேசிய கல்விக் கொள்கை, மொழி சுதந்திரத் தன்மை கொண்டது. எந்தவொரு மாநிலத்திலோ அல்லது சமுகத்திலோ எந்தவொரு மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஒவ்வொரு மாணவரும் தாய்மொழியில் தரமான கல்வி கற்பதை தேசிய கல்விக்கொள்கை உறுதி செய்கிறது.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே தமிழ்நாடும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.